கேப் டவுன்: ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், சௌரவ் கங்குலியின் பிரிட்டோரியா கேபிடல்ஸை வீழ்த்தி மூன்றாவது SA20 கோப்பையை வென்றது. இது நான்கு சீசன்களில் சன்ரைசரஸ் ஈஸ்டர்ன் கேப் அணி வெல்லும் மூன்றாவது சாம்பியன் பட்டம் ஆகும். இதனால் அணி உரிமையாளரான காவ்யா மாறன் மகிழ்ச்சியில் உள்ளார்.
கேப் டவுன் நியூலாண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில், முதலில் ஆடிய பிரிட்டோரியா அணிக்காக (சிஎஸ்கே வீரர்) டீவால்ட் ப்ரேவிஸ் 56 பந்துகளில் 101 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம், பிரிட்டோரியா அணி 7 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. எனினும், 19வது ஓவரில் ப்ரேவிஸ் வெளியேறிய பிறகு, கடைசி இரண்டு ஓவர்களில் வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டு, இலக்கைப் பெரிய அளவில் உயர்த்தத் தவறினர்.

159 ரன்கள் இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் அணிக்கு, கேப்டன் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (41 பந்துகளில் 63* ரன்கள்), மேத்யூ ப்ரீட்ஸ்கே (49 பந்துகளில் 68* ரன்கள்) இருவரும் ஐந்தாவது விக்கெட்டுக்கு 114 ரன்கள் கூட்டணி அமைத்தனர். ஸ்டப்ஸ் 18வது ஓவரில் 21 ரன்கள் உட்பட அதிரடியாக ஆடி, அடுத்தடுத்து சிக்ஸர்கள் அடித்து, நான்கு பந்துகள் மீதமிருக்க ஆறு விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் வெற்றியை உறுதி செய்தது.
தென் ஆப்பிரிக்க மண்ணில் பெரிய இறுதிப் போட்டிகளில் சௌரவ் கங்குலிக்கு தொடர் சறுக்கல்கள் நீடிக்கின்றன. 2003 உலகக் கோப்பையில் கேப்டனாகத் தோல்வியைத் தழுவிய அவர், வெளிநாட்டு டி20 லீக்கில் தலைமைப் பயிற்சியாளரான முதல் இந்தியராக, டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் ஐபிஎல் மற்றும் WPL இறுதிப் போட்டிகளிலும் பின்னடைவுகளைச் சந்தித்தார். தற்போது SA20 இறுதிப் போட்டியிலும் அதே நிலை தொடர்ந்தது அவருக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது.
ஏட்ரியன் பிரெல் பயிற்சியாளராக உள்ள சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி, நான்கு SA20 இறுதிப் போட்டிகளிலும் விளையாடி மூன்று முறை பட்டத்தை வென்றுள்ளது. “நான் மிகவும் பெருமையாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். இது அற்புதமான இறுதிப் போட்டி. டீவால்ட் அப்படியொரு ஆட்டத்தை வெளிப்படுத்தியபோதும், அவர்களை 158 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியதுதான் சிறப்பம்சம்” என்று பிரெல் கூறினார்.
“தொடர்ச்சியாக நான்கு இறுதிப் போட்டிகளில் விளையாடியது ஒரு அற்புதமான சாதனை. ஒவ்வொரு வீரரையும், முழு அணியையும் நினைத்து நான் பெருமைப்படுகிறேன். இளம் தலைமுறைக்கு ஒரு முன்மாதிரியாக கோப்பையை சரியான வழியில் வெல்ல வேண்டும்” என்றார். முதல் சீசனிலேயே கேப்டனாக கோப்பையை வென்றது ட்ரிஸ்டன் ஸ்டப்ஸுக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்தது.
“வார்த்தைகளே இல்லை, இதை எப்படிச் செய்தோம் என்று தெரியவில்லை. நானும் மேட்டியும் களத்தில் அமைதியாகவும், உள்ளே பதட்டத்துடனும் இருந்தோம். நாங்கள் இருவரும் ஒன்றாகச் சிறப்பாக பேட்டிங் செய்வோம் என்பது எங்களுக்குத் தெரியும். வேகத்தை அதிகரிக்க சரியான ஓவரை எதிர்பார்த்தோம். 16வது ஓவரில் அது கிடைத்தது, அதைப் பயன்படுத்திக் கொண்டோம். நெருக்கடியில் வேடிக்கையான விஷயங்கள் நடக்கும்” என்று ஸ்டப்ஸ் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
ஸ்டப்ஸ் தொடர்ந்து, “இந்த மாதம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சிறந்த குழுவுடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. போட்டிகளுக்கான திட்டங்களை மிகச் சிறப்பாக வகுத்தோம். பயிற்சியாளர் அடியின் ரன் மேலாண்மையும் அணிப் பங்களிப்பும் சிறப்பானது. நாம் எங்கு சென்றாலும் ஆதரவளிக்கும் ஆரஞ்சு ஆர்மி எங்களிடம் உள்ளது” என்று பாராட்டினார்.
கேபிடல்ஸ் அணி, 2023 ஆம் ஆண்டின் முதல் போட்டியையும் சேர்த்து, சன்ரைசர்ஸ் அணியிடம் இதுவரை இரண்டு இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. “இது ஏமாற்றமளிக்கிறது. இரண்டு பேட்டர்கள் களத்தில் நின்று நிலைத்துவிட்டார்கள். வெற்றிக்கு இவ்வளவு அருகில் வந்து தோற்றதில் நாங்கள் காயப்பட்டுள்ளோம். பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் எங்களின் தொடக்கத்தை மேம்படுத்த வேண்டும்” என்று கேபிடல்ஸ் கேப்டன் கேசவ் மஹாராஜ் வருத்தத்துடன் ஒப்புக்கொண்டார்.
மஹாராஜ் மேலும், “வீரர்கள் சிறிது காலம் வலியுடன் இருப்பார்கள். நான் எதிர்மறையான விஷயங்களில் கவனம் செலுத்துபவன் அல்ல. ஆனால் ஒரு அணியாக வெற்றிக்கோப்பைகளை வெல்ல வேண்டுமானால், தவறுகளை சரிசெய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார். இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் தங்கள் மூன்றாவது SA20 கோப்பையை வென்று, திறமையை மீண்டும் நிலைநாட்டியுள்ளது.