சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றிருக்கிறது. ஐபிஎல் வரலாற்றிலேயே முதன் முறையாக சென்னை சேப்பாக்கத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு தக்கவைக்கப்பட்டுள்ளது. அதற்கு சிஎஸ்கே அணி மோசமாக ஆடியதுதான் காரணம் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்தப் போட்டிக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரண்டு அணிகளும் ஒரே நிலையில் இருந்தன. இந்த இரண்டு அணிகளும் எட்டு போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று, நான்கு புள்ளிகளுடன் இருந்தன. புள்ளிப் பட்டியலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒன்பதாவது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் பத்தாவது இடத்திலும் இருந்தன.

இந்தப் போட்டியில் தோல்வியடைந்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு 90% முடிவுக்கு வரும் என்ற நிலை இருந்தது. இந்த இக்கட்டான நிலையில்தான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 புள்ளிகளை பெற்றுள்ளது. அந்த அணிக்கு இன்னும் ஐந்து போட்டிகள் மீதமுள்ளன. அந்த ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதிகபட்சமாக 16 புள்ளிகளைப் பெற முடியும். இதுவரை ஐபிஎல் வரலாற்றில் 16 புள்ளிகளைப் பெற்ற அணிகள் அனைத்துமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. எனவே, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது.
அதே சமயம், சென்னை சூப்பர் கிங்ஸ் 4 புள்ளிகளுடன் இருக்கும் நிலையில், மீதமுள்ள 5 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் அதிகபட்சமாக 14 புள்ளிகளை மட்டுமே பெற முடியும். இந்த ஆண்டு முதல் ஆறு இடங்களில் இருக்கும் அணிகள் அதிக புள்ளிகளைப் பெற்று இருப்பதால், இந்த ஆண்டு 14 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வது மிகவும் கடினமான விஷயமாக இருக்கும்.
இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் ஷேக் ரஷீத் ஆட்டத்தின் முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் முகமது ஷமியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆயுஷ் மாத்ரே அதிரடியாக ஆடி 19 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார். சாம் கரன் மூன்றாம் வரிசையில் இறங்கி 9 ரன்களும், ரவீந்திர ஜடேஜா நான்காம் வரிசையில் இறங்கி 21 ரன்களும் எடுத்தனர்.
டெவால்டு பிரெவிஸ் அதிரடி ஆட்டம் ஆடினார். அவர் 25 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்தார். சிவம் துபே ஒன்பது பந்துகளில் 12 ரன்களும், தீபக் ஹூடா 21 பந்துகளில் 22 ரன்களும் சேர்த்தனர். எட்டாம் வரிசையில் இறங்கிய தோனி 10 பந்துகளில் 6 ரன்கள் மட்டும் சேர்த்து ஏமாற்றம் அளித்தார். சிஎஸ்கே அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 154 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அடுத்து ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விரைவாக ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் துவக்க வீரர் அபிஷேக் ஷர்மா இரண்டு பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். எனினும் அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் ரன்கள் சேர்த்தனர். குறிப்பாக இஷான் கிஷன் 34 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்தார். கமிந்து மென்டிஸ் 22 பந்துகளில் 32 ரன்களும், நித்திஷ் குமார் ரெட்டி 13 பந்துகளில் 19 ரன்களும் சேர்த்தனர். அந்த அணி 18.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, சென்னையில் வெற்றி பெற்றதை அடுத்து அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.