லண்டன்: இங்கிலாந்தில் நடைபெறவுள்ள தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இந்திய ராணுவத்தை அவமதித்த ஒரு வீரரை இந்திய உரிமையாளர் ஒருவர் ஏலத்தில் எடுத்தது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
தி ஹண்ட்ரட் தொடரின் ஆடவர் அணிக்கான ஏலம் லண்டனில் நடைபெற்றது. இதில் ஐபிஎல் தொடரில் விளையாடும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் துணை அணியான சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி பங்கேற்றது. சன் குழுமத்திற்குச் சொந்தமான இந்த அணியின் தலைமைச் செயல் அதிகாரி காவ்யா மாறன் நேரடியாக இந்த ஏலத்தில் கலந்து கொண்டார்.

இதில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை 1,90,000 பவுண்டுகளுக்கு, அதாவது இந்திய மதிப்பில் சுமார் 2.34 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் அணி வாங்கியது. வெளிநாட்டு தொடர்களாக இருந்தாலும் இந்திய உரிமையாளர்கள் பாகிஸ்தான் வீரர்களைத் தேர்வு செய்வதில்லை என்ற விதியை அந்த அணி தற்போது மாற்றியுள்ளது.
சன்ரைசர்ஸ் அணியின் இந்த முடிவுக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அப்ரார் அகமது கடந்த காலங்களில் இந்திய ராணுவத்தையும், இந்திய வீரர்களையும் சமூக வலைத்தளங்களில் கேலி செய்துள்ளார் என ரசிகர்கள் பழைய பதிவுகளை சுட்டிக்காட்டி வருகின்றனர். இந்தியாவிற்கு எதிராக வெறுப்பை வெளிப்படுத்திய ஒரு பாகிஸ்தான் வீரருக்கு, இந்திய நிறுவனம் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து அணியில் எடுப்பது தேசப்பற்றுக்கு எதிரானது என ரசிகர்கள் சன்ரைசர்ஸ் நிர்வாகத்தை விமர்சித்து வருகின்றனர்.

இந்த ஏலத்தில் அப்ரார் அகமதுவை தொடர்ந்து, மற்றொரு பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரான உஸ்மான் தாரிக்கை பர்மிங்காம் பீனிக்ஸ் அணி 1,40,000 பவுண்டுகளுக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால், பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்களான ஹாரிஸ் ராவுஃப், சைம் அயூப் மற்றும் ஷதாப் கான் ஆகியோரை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை. 27 வயதான அப்ரார் அகமது இதுவரை 46 டெஸ்ட், 28 ஒருநாள் மற்றும் 52 சர்வதேச டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
