லண்டன்: இங்கிலாந்தில் நடைபெற உள்ள 2026 தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில், இந்தியாவைச் சேர்ந்த சன்ரைசர்ஸ் நிர்வாகத்திற்குச் சொந்தமான சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி, பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை ஏலத்தில் எடுத்தது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் சுமார் 2.34 கோடி ரூபாய் அதாவது 190,000 பவுண்டுகள் கொடுத்து அவரை ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த முடிவு சமூக வலைத்தளங்களிலும், கிரிக்கெட் வட்டாரத்திலும் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.
இந்த நிலையில், ஐபிஎல் தொடரின் முன்னாள் தலைவர் லலித் மோடி இந்த விவகாரம் குறித்து சன்ரைசர்ஸ் அணியின் இணை உரிமையாளர் காவ்யா மாறனுக்கு ஆலோசனைகளை வழங்க முன்வந்துள்ளார். அவர் தனது இணையப் பதிவில், "ரசிகர்கள் ஏற்கனவே அதிருப்தியில் உள்ள நிலையில் ஒரு பாகிஸ்தான் வீரருக்காக 2.34 கோடி ரூபாய் முதலீடு செய்வதா? இத்தகைய நெருக்கடியான சூழ்நிலைகளை எப்படிக் கையாள்வது மற்றும் மிகப்பெரிய சாம்ராஜ்யங்களை எப்படி உருவாக்குவது என்பது எனக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் என்னை அழையுங்கள்" என்று சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.

சன்ரைசர்ஸ் அணியின் முடிவை இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரும் கடுமையாக விமர்சித்துள்ளார். "ஒரு பாகிஸ்தான் வீரருக்கு வழங்கப்படும் ஊதியம் மறைமுகமாக இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களின் உயிரிழப்புகளுக்குப் பங்களிக்கிறது என்பதை இந்திய நிறுவனங்கள் உணர வேண்டும். உரிமையாளர் இந்தியராக இருக்கும்போது, இது போன்ற முடிவுகள் ஏற்புடையது அல்ல" என்று அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார். 2008 மும்பை தாக்குதலுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் அனுமதிக்கப்படாத நிலையையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஐபிஎல் தொடர்புடைய ஒரு அணி, வெளிநாட்டு லீக் தொடரில் பாகிஸ்தான் வீரரை ஒப்பந்தம் செய்வது இதுவே முதல் முறையாகும். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வீரர்களின் நாடுகள் அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என்று ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது.

2022 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி அறிமுகமான அப்ரார் அகமது, தனது சுழற்பந்து வீச்சுக்கு மிகவும் பெயர் பெற்றவர். இவரை அதிக விலை கொடுத்து ஏலத்தில் எடுத்ததன் மூலம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஆகிய அணிகளைத் தொடர்ந்து சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியும் தற்போது உலகளாவிய கவனத்தையும் விமர்சனங்களையும் ஒருசேர ஈர்த்துள்ளது.
