
டெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு சங்க (பிசிசிஐ) நிர்வாகத்துக்கான புதிய வரைவு சட்ட திட்டங்களுக்கு, சிறு மாற்றங்களுடன் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. குறிப்பாக, ஒரு மாநிலம், ஒரு ஓட்டு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
உலகின் மிகப் பெரிய பணக்கார கிரிக்கெட் சங்கமாக பிசிசிஐ உள்ளது. 2013ல் நடந்த ஐபிஎல் உள்பட பிசிசிஐ நி்ர்வாகத்தில் பல மோசடிகள் நடந்துள்ளதாக முட்கல் கமிட்டி அறிக்கை அளித்தது. அதையடுத்து பிசிசிஐ நிர்வாகம் தொடர்பாக விசாரிக்க நீதிபதி லோதா தலைமையிலான குழுவை 2015ல் உச்ச நீதிமன்றம் அமைத்தது.

நீதிபதி லோதா தலைமையிலான குழு பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தி, பிசிசிஐ நிர்வாகத்தை மேம்படுத்துவது தொடர்பாக பல பரிந்துரைகளை அளித்தது. ஆனால், அந்த பரிந்துரைகளை பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்கள் நிறைவேற்றவில்லை. அதையடுத்து பிசிசிஐ தலைவர் பொறுப்பில் இருந்த அனுராக் தாக்குர் மற்றும் செயலர் அஜய் ஷிர்கே உள்ளிட்டோரை நீக்கியது உச்ச நீதிமன்றம்.
மேலும் முன்னாள் சிஏஜியான வினோத் ராய் தலைமையில், சிஓஏ எனப்படும் நிர்வாகக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைந்தது. இந்தக் குழுதான் நிர்வாகத்தை தற்போது கவனித்து வருகிறது.
இதனிடையில் பிசிசிஐ நிர்வாகம் தொடர்பாக புதிய சட்டத் திட்டங்கள் வகுக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தனது உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
குறிப்பிட்ட சில மாறுதல்களுடன்,. புதிய வரைவு சட்ட திட்டத்தை செயல்படுத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதில் முக்கியமானது, ஒரு மாநிலம், ஒரு ஓட்டு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி குஜராத்தில் உள்ள குஜராத், சவுராஷ்டிரா மற்றும் பரோடா கிரிக்கெட் சங்கங்கள் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள மகாராஷ்டிரா, மும்பை, விதர்பா கிரிக்கெட் சங்கங்களுக்கு நிரந்தர உறுப்பினர் அநந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, ரயில்வே, சர்வீஸஸ், பல்கலைக்கழகங்கள் போன்றவையும், பிசிசிஐ நிர்வாகக் குழுவில் இடம்பெறுகின்றன.
மேலும், பிசிசிஐ அல்லது மாநில சங்கங்களில் நிர்வாகிகளாக இருப்பவர்கள், தொடர்ந்து 6 ஆண்டுகள் பதவி வகிக்கும் வகையில் திருத்தம் செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த புதிய சட்டதிட்டத்தை தமிழ்நாடு சங்கங்களுக்கான பதிவாளர், 30 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பிசிசிஐ நிர்வாகம் தொடர்பாக நீண்டகாலமாக இருந்த பிரச்னைகளுக்கு முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.