ஐந்து நாடுகள்
டி20 உலகக்கோப்பை - ஆசிய பகுதி இறுதிப் போட்டித் தொடரில் சிங்கப்பூர், நேபாள், கத்தார், குவைத், மலேசியா ஆகிய ஐந்து நாடுகள் பங்கேற்றன. இந்த தொடர் ஐசிசியால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச டி20 போட்டிகளாக நடந்தது என்பதால் முக்கியத்துவம் பெற்றது.
மூன்று போட்டிகளில் வெற்றி
இந்தத் தொடரில் ஒவ்வொரு அணியும் தலா நான்கு போட்டிகளில் மற்ற அணிகளுடன் ஒவ்வொரு முறை மோதின. இதில் சிங்கப்பூர் - குவைத் போட்டி மழையால் கைவிடப்பட்டது. அது தவிர மீதமிருந்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற சிங்கப்பூர் அணி ஏழு புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து கோப்பையை வென்றது.
சுரேந்திரன் அட்டகாசம்
சுரேந்திரன் சந்திரமோகன் இந்த தொடரில் இரண்டு போட்டிகளில் தன் அணியில் அதிக ரன்கள் எடுத்து அசத்தினார். சிங்கப்பூர் அணியின் துவக்க வீரராக களம் இறங்கிய சுரேந்திரன் 3 டி20 போட்டிகளில் 105 ரன்கள் குவித்தார். இதில் ஒரு அரைசதம் அடங்கும்.
யார் இந்த சுரேந்திரன்?
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பெருமகளூர் கிராமத்தில் இருந்து கடந்த 2010 ஆம் ஆண்டு சிங்கப்பூர் சென்றார் சுரேந்திரன். அங்கே வேலை செய்யவே சென்றாலும் கிரிக்கெட் மீதான ஆர்வம் காரணமாக சிங்கப்பூர் கிரிக்கெட் அணியில் சேர முயற்சி செய்து 2013ஆம் ஆண்டில் அந்த அணியில் சேர்ந்தார். பேட்ஸ்மேனாக தொடர்ந்து சிறப்பாக ரன் குவித்து வந்த அவர், 2019 ஆசிய பகுதி உலகக்கோப்பை டி20 தொடரிலும் அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்துள்ளார்.