
கடும் கட்டுப்பாடுகள்
2020 ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மத்தியில் நடக்கும் கிரிக்கெட் தொடர் என்பதால் பங்கேற்க உள்ள வீரர்கள், அணிகளை சேர்ந்தவர்கள், அனைத்து வித பணியாளர்கள் என அனைவருக்கும் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது பிசிசிஐ.

பாதுகாப்பு வளையம்
அனைத்து ஐபிஎல் அணிகளும் தனித் தனியாக பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி உள்ளன. அதை தாண்டி வீரர்கள் வெளி நபர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளக் கூடாது. அதன் மூலம், கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயத்தை கட்டுப்படுத்த முடியும் என்பதாலேயே இந்த கட்டுப்பாடு.

கொரோனா வைரஸ் பரிசோதனை
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இவை அனைத்தையும் பின்பற்றி ஆகஸ்ட் 15 சென்னையில் ஒன்று கூடியது. அங்கே ஆறு நாள் பயிற்சி முகாமில் பங்கேற்ற பின் துபாய் கிளம்பி வந்தது. துபாயில் விதிப்படி முதல் வாரத்தில் மூன்று முறை கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ரெய்னாவை கலக்கமடைய வைத்தது
அதில் இரண்டு வீரர்கள் மற்றும் 11 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதியானது. இந்த தகவல் ரசிகர்களை கலக்கமடைய வைத்தது. அதே போல, அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னாவையும் கலக்கமடைய வைத்தது. ஆம், ரெய்னா கொரோனா வைரஸ் அச்சத்துக்கு ஆளானார் என்கிறது சிஎஸ்கே வட்டாரம்.

எப்படி பாதிப்பு ஏற்பட்டது?
துபாய் வரும் வரை சிஎஸ்கே அணியில் எந்த குழப்பமும் இல்லை. சென்னையில் மூன்று முறை பரிசோதனை செய்யப்பட்டு, அதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றே முடிவு வந்தது. பின் எப்படி துபாயில் சிலருக்கு பாதிப்பு ஏற்பட்டது? இத்தனை கட்டுப்பாட்டுடன் இருந்தும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றால், மீண்டும் இதே போல நடக்கவும் வாய்ப்பு உள்ளது என்பது பற்றி ரெய்னா பேசி உள்ளார்.

ரெய்னா கவலை
இத்தனை கட்டுப்பாட்டுடன் இருந்தும் சிஎஸ்கே அணியில் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை எண்ணி ரெய்னா கவலை அடைந்துள்ளார். மேலும், ஐபிஎல் தொடருக்கு முன் ஒரு மாதம், அதன் பின் தொடர் நடக்கும் இரண்டு மாதம் என மூன்று மாதங்களுக்கு இந்த அச்சத்துடன் இருக்க முடியுமா? என்ற தன் கவலையை கூறி உள்ளார்.

சமாதானம் செய்ய முயற்சி
அவரை சமாதானம் செய்ய முயன்றும் அவர் தொடர்ந்து தன் பயத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அவரை சமாதானம் செய்தாலும் அச்சத்துடன் அவரால் தொடரில் நீண்ட நாட்கள் ஆட முடியாது. இதை அடுத்து சுரேஷ் ரெய்னாவின் விருப்பப்படி அவரை இந்தியாவுக்கே அனுப்பும் முடிவை எடுத்துள்ளது சிஎஸ்கே அணி நிர்வாகம். மற்ற வீரர்களுக்கும் அவரது முடிவை கூறி உள்ளனர்.

14 நாள் தனிமை
பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் சிஎஸ்கே வீரர்கள் தீபக் சாஹர், ருதுராஜ் கெயிக்வாட் மற்றும் 11 நபர்களும் அவர்களுடன் நெருக்கமாக இருந்தவர்களும் 14 நாள் தனிமையில் உள்ளனர். மற்றவர்கள் ஆகஸ்ட் 31 வரை தனிமையில் இருப்பார்கள் என கூறப்படுகிறது.

கேள்விகள்
இனி சிஎஸ்கே அணி எப்போது பயிற்சியை துவங்கும்? அவர்களுடன் ஆட மற்ற அணிகள் சம்மதம் தெரிவிக்குமா? என பல கேள்விகளுக்கு பதில் இல்லை. பிசிசிஐ இந்த விவகாரத்தால் ஐபிஎல் அட்டவணையை வெளியிடாமல் நிறுத்தி வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications