மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான் ஆகியோரின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி இருக்கும் சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய அணிக்காக பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்த இந்த இரு வீரர்களும் தற்போது பெட்டிங் ஆப் வழக்கில் சிக்கி இருக்கின்றனர்.
பெட்டிங் ஆப் மூலம் பல கோடி பேர் பணத்தை இழந்து வருவதால் அதற்கு மத்திய அரசு அண்மையில் தடை விதித்தது. இந்த நிலையில் 1x8 பேட் மற்றும் பாரி மேட்ச் போன்ற பெட்டிங் ஆப்களின் விளம்பர தூதர்களாக ரெய்னா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் செயல்பட்டு இருக்கிறார்கள்.

இந்த இரு நிறுவனம் மூலம் எவ்வளவு பணம் பெற்றுள்ளீர்கள்? எவ்வளவு பணம் கைமாறப்பட்டிருக்கிறது என்பது குறித்து அமலாக்கத்துறை இரு வீரர்களிடம் விசாரணை நடத்தியது. இதில் சுரேஷ் ரெய்னாவிடம் எட்டு மணி நேரம் வரை அமலாக்கத் துறையினர் விசாரித்துள்ளனர்.
ஷிகர், ரெய்னா தவிர கூகுள் மற்றும் பேஸ்புக் ஆகிய நிறுவன அதிகாரிகளும் அமலாக்கத் துறையினரால் விசாரிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த வழக்கில் முக்கிய நடவடிக்கையாக ரெய்னா மற்றும் ஷிகர் தவான் ஆகியோரிடம் உள்ள 11 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
மேலும் இந்த ஆப்கள் மூலம் வரி எயிப்பு நடத்தப்பட்டு இருக்கிறதா என்று விசாரணையும் தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா,நடிகர் சோனு சூட், ஊர்வசி அதுல்லா உள்ளிட்ட பிரபலங்களும் விசாரிக்கப்பட்டு இருந்த நிலையில் ரெய்னா மற்றும் ஷிகர் தவானின் சொத்துக்கள் மட்டும் முடக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.