மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னை சூப்பர் கிங்ஸின் தற்போது 13 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. தற்போது சிஎஸ்கே அணி கேப்டன் தோனிக்கு 41 வயது ஆவதால் அவர் இந்த தொடர் முடிந்தவுடன் ஓய்வு பெற்று விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா, கடைசியாக சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தின் போது தோனியை சந்தித்து பேசினார். அப்போது தோனியிடம் பல விஷயங்கள் குறித்து பேசியதாக சுரேஷ் ரெய்னா கூறினார்.

இதில் தாம் நடப்பு சீசனில் கோப்பையை வென்று விட்டு மீண்டும் ஒரு வருடம் சென்னை அணிக்காக விளையாட திட்டமிட்டு இருப்பதாக தோனி தம்மிடம் கூறியதாக ரெய்னா தெரிவித்தார். மேலும் பேசிய ரெய்னா தோனி தற்போது நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார். முக்கியமாக பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி வருகிறார். தற்போது அணியும் நல்ல காம்பினேஷனில் இருக்கிறது.
அது தவிர போட்டி முடிந்தவுடன் பல வீரர்கள் தோனியிடம் வந்து தங்களது சந்தேகங்களை கிரிக்கெட் தொடர்பாக கேட்கிறார்கள். அதற்கு தோனியும் பதில் சொல்லி வருகிறார். என்னைப் பொறுத்தவரை அவருடைய உடல் தகுதி எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து அவர் ஐபிஎலில் தனது எதிர்காலம் குறித்து முடிவெடுப்பார்.
தோனியுடன் நான் பழகியதை வைத்து சொல்வதென்றால் அவர் நிச்சயம் இன்னும் ஒரு ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என ரெய்னா கூறினார். மேலும் பேசிய அவர் சிஎஸ்கே அணியின் எதிர்கால கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் இருப்பார் என கூறினார். ருதுராஜ் பேட்டிங்கில் அபாரமாக விளையாடி வருவதாக கூறிய ரெய்னா தோனிக்காக ஒரு கோப்பையை வென்று தர வேண்டும் என்ற உத்வேகத்துடன் இருக்கிறார் என்று பாராட்டினார்.

மேலும் பேசிய ரெய்னா, ருதுராஜ் பேட்டிங் நுணுக்கமும் கொஞ்சம் முன்னேறி இருக்கிறது. மேலும் ருதுராஜ் பில்டிங்கும் பெரும் அளவில் மாறி இருக்கிறது. அவர் நல்ல பேட்ஸ்மேன் ஆகவும் கேப்டன் ஆகவும் இருப்பார். சிஎஸ்கே அணிக்காக அவர் நிறைய பொறுப்புகளை எடுத்துக் கொண்டிருக்கிறார். இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் அவர் கேப்டன் ஆகலாம் என்று ரெய்னா கூறினார்.