
தடைகள்
2020 ஐபிஎல் தொடர் துவக்கம் முதலே பல தடைகளை, சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. அதிலும் எப்போதும் ஒற்றுமையாக இருக்கும் சிஎஸ்கே அணியில் மிகப் பெரிய விரிசல் ஏற்பட்டது தான் ரசிகர்கள் உட்பட பலருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.

துணை கேப்டன்
சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனிக்கு அடுத்த முக்கியமான இடத்தில் இருக்கிறார். அணியின் துணை கேப்டன் என்ற இடத்தில் இருந்தார். தோனி இந்த ஆண்டுடன் ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு பெறும் பட்சத்தில் ரெய்னா அணியின் கேப்டனாக வாய்ப்பு இருந்தது.

கொரோனா வைரஸ் பாதிப்பு
இந்த நிலையில் தான் துபாயில் முகாமிட்டுள்ள சிஎஸ்கே அணியில் இரு வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அது பெரும் பரபரப்பை கிளப்பி வந்த நிலையில், சுரேஷ் ரெய்னா திடீரென இந்தியா திரும்பினார்.

விதிமுறைகளை மீறிய ரெய்னா!
ரெய்னா துபாயில் குவாரன்டைனில் இருந்த போது அது தொடர்பான விதிமுறைகளை மீறியதாக கூறப்படுகிறது. அந்த விவகாரத்தில் தான் சிஎஸ்கே நிர்வாகத்திற்கும், ரெய்னாவிற்கும் இடையே கசப்பான சம்பவங்கள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

ரெய்னா விளக்கம்
அதை அடுத்து தான் ரெய்னா இந்தியா திரும்பினார். அவர் தான் ஏன் இந்தியா திரும்பினேன் என பல்வேறு ஊடகங்களுக்கு விளக்கம் அளித்து வருகிறார். அவர் தன் குடும்பத்தை காணவே இந்தியா வந்தேன் என்றும், தன் அத்தை குடும்பத்தில் மர்ம கும்பல் நடத்திய தாக்குதலில் இருவர் பலியானதால் அவர்களுடன் உறுதுணையாக நிற்கவே வந்தேன் என்றும் கூறி வருகிறார்.

அணிக்கு திரும்ப ஆர்வம்
மேலும், தான் மீண்டும் சிஎஸ்கே அணியில் ஆடுவேன் என்றும் கூறி இருக்கிறார். ரெய்னா சிஎஸ்கே அணியில் மீண்டும் இணைந்து ஆட ஆர்வமாக இருப்பதை ஒவ்வொரு பேட்டியிலும் பதிவு செய்துள்ளார். ஆனால், சிஎஸ்கே நிர்வாகம் என்ன நினைக்கிறது?

சமாதானம் ஆன சீனிவாசன்
சிஎஸ்கே அணி உரிமையாளர் முதலில் ரெய்னாவை கடுமையான வார்த்தைகளால் பேசி இருந்தாலும், பின் அவரை தன் மகன் மாதிரி எனக் கூறி சமாதானம் செய்து கொண்டதை மறைமுகமாக சுட்டிக் காட்டி உள்ளார். ஆனால், ரெய்னா அணியில் மீண்டும் இணைவாரா?

தோனி கையில்..
அது பற்றி கேட்ட போது தான் அணியின் கேப்டன் இல்லை என சீனிவாசன் கூறியதில் இருந்தே ரெய்னா சிஎஸ்கே அணியில் சேர்வது முழுவதுமாக கேப்டன் தோனி கையில் தான் இருக்கிறது என தெரிகிறது. அது மட்டுமின்றி, ரெய்னா தற்போது தோனிக்கு மெசேஜ் அனுப்பி உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

தோனியிடம் வாய்ப்பு கேட்டார்
கேப்டன் தோனி, பயிற்சியாளர் பிளெம்மிங் மற்றும் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் ஆகியோருக்கு ரெய்னா மெசேஜ் அனுப்பி தான் மீண்டும் அணிக்கு வர விரும்புவதை கூறி இருக்கிறார். தோனியிடம் அவர் மீண்டும் வாய்ப்பு கேட்டுள்ளது தான் இதில் உணர்ச்சிகரமான விஷயம்.

சகோதரர்கள் போல இருந்து விட்டு..
கடந்த ஆகஸ்ட் 15 அன்று இருவரும் ஒன்றாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று, சகோதரர்களாக வலம் வந்த நிலையில், அடுத்த 20 நாட்களில் காட்சிகள் மாறி, தோனியிடம் தன்னை மீண்டும் அணியில் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுள்ளார் ரெய்னா. தோனி ரெய்னாவை ஏற்றுக் கொள்வாரா?


Click it and Unblock the Notifications