சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாக விளையாடி வரும் நிலையில், அந்த அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் ஏலத்தில் நடந்த சொதப்பலைச் சுட்டிக்காட்டி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் மற்றும் சிஎஸ்கே நிர்வாகத்தை விமர்சித்திருக்கிறார்.
2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெவோன் கான்வேவை 6.25 கோடி ரூபாய்க்கு வாங்கியது, ராகுல் திரிபாதியை 3.4 கோடி ரூபாய்க்கு வாங்கியது, ரச்சின் ரவீந்திராவை 4 கோடி ரூபாய்க்கும், ரவிச்சந்திரன் அஸ்வினை 9.75 கோடி ரூபாய்க்கும் வாங்கியது. பந்துவீச்சாளர்களான கலீல் அகமதை 4.8 கோடி ரூபாய்க்கும், நூர் அகமதை 10 கோடி ரூபாய்க்கும் வாங்கியிருந்தது.

இந்த ஆறு பேரில், நூர் அகமது மற்றும் கலீல் அகமது ஆகிய இருவர் மட்டுமே இதுவரை சிறப்பான செயல்பாட்டை வெளிக்காட்டி இருக்கிறார்கள். மற்ற நால்வரும் படுமோசமாகச் சொதப்பி வருகிறார்கள்.
இந்த நிலையில் தான் சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் ஏலத்தில் இது போன்ற வீரர்களை வாங்கியதற்கு பதிலாக நட்சத்திர வீரர்களை சிஎஸ்கே அணி வாங்கியிருக்கலாம் எனச் சுட்டிக்காட்டி விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.
2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 65 கோடி ரூபாய்க்கு ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, மதீஷா பதிரானா, சிவம் துபே மற்றும் தோனி என ஐந்து வீரர்களைத் தக்க வைத்திருந்தது.
ஒவ்வொரு அணிக்கும் 120 கோடி ரூபாய் அளிக்கப்பட்ட நிலையில், அதில் 65 கோடி ரூபாயை ஐந்து வீரர்களுக்கு மட்டுமே செலவிட்டது சென்னை சூப்பர் கிங்ஸ். மீதமுள்ள 55 கோடியை வைத்து தான் மற்ற வீரர்களை ஏலத்தில் வாங்கியது. அதிலும் அஸ்வின், டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திராவுக்கு பல கோடிகளை வாரி இறைத்தது
இது பற்றிப் பேசியிருக்கும் சுரேஷ் ரெய்னா, "நீங்கள் ஏலத்தில் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல். ராகுலை விட்டுவிட்டீர்கள். அணி நிர்வாகமும் தலைமைப் பயிற்சியாளரும் நல்ல வீரர்களை வாங்குவதற்கு முயற்சி செய்யவில்லை. ஏலத்தில் சிறப்பாக விளையாடும் பல வீரர்கள் இருந்தனர். ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவர்களை வாங்கவில்லை. தங்களிடம் அதிக பணம் இருந்தும் சிஎஸ்கே அணி அதை செய்யவில்லை. இதற்கு முன் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இப்படி தடுமாற்றத்துடன் இருந்து நான் பார்த்ததே இல்லை" எனக் கூறியிருக்கிறார்.