மொஹாலி: பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிரடி ஆட்டம் ஆடிவரும் அந்த அணியின் துவக்க வீரர் பிரப்சிம்ரன் சிங்கை குட்டி கெவின் பீட்டர்சன் எனப் பாராட்டியுள்ளார் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக ஆடினார். 49 பந்துகளில் 83 ரன்கள் சேர்த்தார். ஆறு பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களை அடித்திருந்தார்.
இந்தப் போட்டியில் பவர் பிளேவின்போது மற்றொரு துவக்க வீரரான பிரியன்ஷ் ஆர்யா வேகப்பந்து வீச்சாளர்களின் ஓவர்களில் பவுண்டரிகளை அடித்து ரன் குவித்து வந்தார். அதன் பின்னர் சுழற் பந்துவீச்சாளர்கள் பந்துவீசத் துவங்கிய பிறகு, பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் அடித்தார்.

பிரியன்ஷ் ஆர்யா 35 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், பிரப்சிம்ரன் சிங் 49 பந்துகளில் 83 ரன்கள் சேர்த்திருந்தார். இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 120 ரன்கள் சேர்த்திருந்தனர். இந்த நிலையில், பிரப்சிம்ரன் சிங் ஆட்டம் கெவின் பீட்டர்சனின் ஆட்டத்தை போல இருப்பதாக சுரேஷ் ரெய்னா குறிப்பிட்டார்.
"பிரப்சிம்ரன் சிங் ஒரு குட்டி கெவின் பீட்டர்சன். அவரைப் போலவே பேட்டிங் செய்கிறார். சுழற் பந்துவீச்சாளர்களை அதிரடியாக தாக்கி ஆடினார். மிடில் ஓவர்களில் தனது ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்" என்று ரெய்னா கூறினார்.
மேலும், "பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளைப் பெற்றிருந்தால், அவர் மகிழ்ச்சி அடைந்திருப்பார். பஞ்சாப் அணியின் துவக்க வீரர்கள் அந்த அணியை முன்னெடுத்துச் சென்று வருகின்றனர். அந்த அணிக்காக ஐபிஎல் கோப்பை வெல்ல வேண்டும் என்று அவர்கள் ஆடி வருகிறார்கள்" என்று சுரேஷ் ரெய்னா பாராட்டினார்.
இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது. அதற்குப் பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரு ஓவர் மட்டுமே பேட்டிங் செய்த நிலையில், மழை பெய்ததால் போட்டி நிறுத்தப்பட்டது. பின்னர் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.