சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகப்பெரிய தவறை செய்துவிட்டதாகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய வீரர்கள் முன்பு இந்திய அணிக்காக விளையாடினர். ஆனால் இனி இந்திய அணியில் சிஎஸ்கே வீரர்கள் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் எனவும் அதிரடியாக ஒரு கருத்தை கூறியுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான தோல்வி இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஏழாவது தோல்வியாகும். இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அதில் இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. இனி சிஎஸ்கே அணி பிளே ஆஃப் செல்வது மிகவும் கடினம். கிட்டத்தட்ட அந்த அணியின் 2025 ஐபிஎல் தொடர் முடிவுக்கு வந்துள்ளது என்றே சொல்லலாம்.

இது குறித்துப் பேசியிருக்கும் சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணி ஏலத்தில் செய்த தவறை சுட்டிக் காட்டி விமர்சனம் செய்து இருக்கிறார். "சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் இனியும் இந்திய அணிக்காக விளையாட மாட்டார்கள். ஏனெனில் சிஎஸ்கே அணியில் தரம் இல்லை. முன்பு சிஎஸ்கே அணியில் ஒரு இந்திய வீரர் சிறப்பாகச் செயல்பட்டால், அவர் உறுதியாக தேசிய அணிக்காக விளையாடுவார். ஏனெனில் சிஎஸ்கே அணி ஒவ்வொரு ஆண்டும் பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்லும். ஒவ்வொரு வீரரும் தங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருப்பார்கள். இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாகச் செயல்படவில்லை'" என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து விமர்சித்த அவர், "இஷான் கிஷன் மற்றும் ரிஷப் பண்ட்டை சிஎஸ்கே வாங்குவதற்கு முயற்சி செய்யவில்லை. சிஎஸ்கே அணியில் தோனிக்கு அடுத்த விக்கெட் கீப்பராக யார் இருப்பார்கள்? தோனிக்கு அடுத்து அவரது இடத்தில் விக்கெட் கீப்பிங் செய்யக்கூடிய யாருமே சிஎஸ்கே அணியில் இல்லை."
"மேலும், சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் நிறைய டாட் பால்களை ஆடுகிறார்கள். இந்த ஆண்டு சிஎஸ்கே அணிதான் அதிக டாட் பால்களை ஆடியுள்ளது. மிடில் ஓவர்களில் பேட்ஸ்மேன்கள் போட்டியை வழிநடத்திச் செல்வதற்கு திணறுகிறார்கள். டாப் ஆர்டரில் இருந்து அவர்களுக்கு எந்த உதவியும் கிடைப்பதில்லை."
"டேவோன் கான்வே நல்ல ஃபார்மில் இருந்தார். ஆனால் அவரது தந்தையின் மறைவால் அவர் அணியை விட்டு விலகியிருக்கிறார். ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் நான்காம் வரிசையில் களமிறக்கப்படுகிறார்கள். இதுவே இந்த அணியில் பேட்டிங்கில் இருக்கும் பலவீனத்தை சுட்டிக்காட்டுகிறது" என்று விமர்சித்திருக்கிறார் சுரேஷ் ரெய்னா.