சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சின்னதல சுரேஷ் ரெய்னா கால் வைத்த நொடி முதலே ரசிகர்களின் ஆரவாரம் விண்ணை தொட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்கு பின் சிஎஸ்கே அணி சேப்பாக்கத்தில் களமிறங்க உள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் சுரேஷ் ரெய்னா நேரில் வந்துள்ளதால் நெகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடக்கவுள்ள 6வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

சிங்கம் தனது முதல் இரையை வேட்டையாடுவதற்காக தனது கோட்டைக்குள் எதிராளியை வரவழைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் 4 ஆண்டுகளுக்கு பின் சென்னை அணி சேப்பாக்கத்தில் களமிறங்குவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் 4 ஆண்டுகளுக்கு பின் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி களமிறங்கும் போது சின்ன தல ரெய்னா அணியில் இல்லை என்று ரசிகர்கள் சோகத்தை வெளிப்படுத்தி வந்தனர். இந்த நிலையில் சென்னை - லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டியை காண சுரேஷ் ரெய்னா நேரில் வந்துள்ளார்.
ஏற்கனவே சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் குவிந்துள்ள நிலையில், சுரேஷ் ரெய்னாவை கண்ட ரசிகர்களின் ஆரவாரம் விண்ணை தொட்டது. இதுகுறித்து சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில், சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்திருப்பது சொந்த வீட்டிற்குள் வந்த உணர்வை கொடுக்கிறது. இந்த வாழ்வில் அடைந்த வெற்றிகள், தோல்விகள் என அத்தனை விஷயங்களையும் சேப்பாக்கம் கண்டிருக்கிறது. என் இதயம் எங்கே இருக்க வேண்டுமோ, அங்கு வந்துருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
சுரேஷ் ரெய்னா மட்டுமல்லாமல் அவருடன் ராபின் உத்தப்பாவும் சேப்பாக்கம் மைதானம் வந்துள்ளார். அதேபோல் சென்னை அணிக்காக ஆடிய பல்வேறு தமிழ்நாடு வீரர்களும் சேப்பாக்கம் மைதானத்தில் கூடி இருக்கிறார்கள். நிச்சயம் நான்கு ஆண்டுகளுக்கு பின் மஞ்சள் ஜெர்சியில் தங்கள் அணி மீண்டும் சொந்த மண்ணில் களமிறங்குவது உணர்வுப்பூர்வமான அனுபவமாக இருக்கப் போவதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.