
சிஎஸ்கே என்றாலே ஒரு குடும்பம்
சென்னை சூப்பர் கிங்ஸ் என்றாலே ஒரு குடும்பம், கதம்பம் என்றெல்லாம் பேசி வந்த தீவிர ரசிகர்கள் தற்போது கடும் விரக்தியில் உள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இரு வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை விட அந்த 2020 ஐபிஎல் தொடரில் இருந்து சுரேஷ் ரெய்னா விலகியதும், அதற்காக அவரை உரிமையாளர் சீனிவாசன் கடுமையாக பேசி இருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒற்றுமை
சுரேஷ் ரெய்னா சென்னையில் இருந்தவரை சிஎஸ்கே அணி ஒரே குடும்பமாகத் தான் இருந்தது. தோனி ஓய்வை அறிவித்த அதே நாளில் ரெய்னாவும் ஓய்வை அறிவித்து தன் ஒற்றுமையை வெளிப்படுத்தினார். 33 வயதில் ஓய்வு பெறும் அவரது முடிவு அதிர்ச்சியாகவும் இருந்தது.

சிஎஸ்கே அணி தான் எல்லாம்
இனி சிஎஸ்கே அணி தான் எல்லாம் என்பது போலத் தான் சுரேஷ் ரெய்னா இருந்தார். சிஎஸ்கே அணியினருடன் துபாய் சென்றார். அங்கே சில சம்பவங்கள் நடந்ததாக பரபரப்பாக பேசப்படுகிறது. ரெய்னா தனக்கு சரியான வசதிகள் இல்லை எனக் கூறினார் என்பது அதில் ஒன்று.

பால்கனி இல்லை
குறிப்பாக தனக்கு அளிக்கப்பட்ட ஹோட்டல் அறையில் பால்கனி இல்லை என அவர் அதிருப்தியில் இருந்ததாகவும், தோனி அறை போல தனக்கும் வேண்டும் என கேட்டதாகவும் அது கிடைக்கததால் வருத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

தோனி - ரெய்னா விரிசல்
பின் சிஎஸ்கே அணி வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட பின் அவர் இன்னும் அச்சத்தில் இருந்தார் எனவும் அதை அடுத்தே அவர் இந்தியாவுக்கு கிளம்பிச் சென்றார் எனவும் கூறப்படுகிறது. தோனி - ரெய்னா இடையே இந்த விவகாரங்களால் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடுமையாக விமர்சனம் செய்தார்
இந்த நிலையில், சிஎஸ்கே அணி உரிமையாளர் சீனிவாசன் இது குறித்து அவுட்லுக் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்தார். அதில் ரெய்னாவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். சிலருக்கு வெற்றி தலைக்குள் ஏறி விடுகிறது என கூறி இருந்தார்.

பண இழப்பு
மேலும், இன்னும் ஐபிஎல் துவங்கவில்லை. ரெய்னாவுக்கு தான் எதை இழக்கப் போகிறோம் என்பது பற்றி விரைவில் புரியும். குறிப்பாக, எவ்வளவு பணத்தை இழக்கப் போகிறோம் என்பது பற்றி புரியும் என நேரடியாக பணத்தை பற்றி பேசி பரபரப்பை கிளப்பினார் சீனிவாசன்.

அதிர்ச்சி
சீனிவாசன் அளித்த பேட்டியில் ரெய்னா பணத்தை இழந்ததை எண்ணி வருத்தப்படுவார் என்கிற ரீதியில் பேசியது பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ரசிகர்கள் பலர் இணையத்தில் இது குறித்து கோபத்தில் பொங்கி வருகின்றனர்.

ஹோட்டல் அறைக்கா சண்டை?
ரெய்னா வெறும் ஹோட்டல் அறைக்கா சண்டை போட்டு இருப்பார்? அதுவும் தோனி போன்ற அறை வேண்டும் என்று கேட்டு இருப்பாரா? தோனி மீது அவர் கொண்ட நட்பை பற்றி எல்லோருக்குமே தெரியுமே. இது பொய் செய்தி போல உள்ளது என சிலர் கூறி உள்ளனர்.

பொய்யான தகவல்கள்
சிலர் சுரேஷ் ரெய்னா வேறு ஏதோ காரணத்தால் விலகி இருக்கலாம். ஆனால், அவர் இமேஜை கெடுக்கவே இது போன்ற பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன என கூறி உள்ளனர். சிஎஸ்கே அணிக்காக ஆடாததால் ஏற்படும் பண இழப்பை குறித்து ரெய்னா வருத்தப்படுவார் என கூறி உள்ளதை சுட்டிக் காட்டி, இப்படி பேசும் ஒரு அணியில் ரெய்னா இனி ஆடவே தேவை இல்லை. அவர் வேறு அணிக்கு ஆட வேண்டும் எனவும் சிலர் பொங்கி உள்ளனர்.


Click it and Unblock the Notifications