
2020 ஐபிஎல்
2020 ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. அதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் உட்பட எட்டு ஐபிஎல் அணிகளும் அங்கே முகாமிட்டுள்ளன. அதில் சிஎஸ்கே அணியில் மட்டும் தொடர்ந்து மோசமான நிகழ்வுகள் நடந்தேறின.

ரெய்னா விலகல்
அதன் உச்சகட்டமாக நடந்தது தான் சுரேஷ் ரெய்னா விலகலும், அதைத் தொடர்ந்து உரிமையாளர் சீனிவாசனின் கடுமையான விமர்சனமும். சுரேஷ் ரெய்னா கடந்த சனிக்கிழமை அன்று தனிப்பட்ட காரணங்களால் 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தது சிஎஸ்கே நிர்வாகம்.

சிஎஸ்கே அணியில் கொரோனா
ரெய்னா இந்த சீசன் முழுவதும் பங்கேற்க மாட்டார் என்றும் கூட சிஎஸ்கே அணி அறிவித்து இருந்தது. ரெய்னா விலகலுக்கு முதலில் சிஎஸ்கே அணியில் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததால் அவர் அச்சத்தால் விலகியதாக கூறப்பட்டது.

வதந்திகள்
ரெய்னாவின் அத்தை குடும்பத்தை ஒரு மர்ம கும்பல் கடுமையாக தாக்கியதால் இரண்டு உறவினர்கள் பலியானார்கள். அதுவும் முக்கிய காரணம் என கூறப்பட்டது. இதன் இடையே தான், ஹோட்டல் அறையில் பால்கனி இல்லை என அதிருப்தி அடைந்து, கேப்டன் தோனியுடன் விரிசல் ஏற்பட்டு அவர் இந்தியா திரும்பியதாக ஒரு வதந்தி கிளம்பியது.

சீனிவாசன் விளாசல்
அந்த மோசமான வதந்தி உண்மை தான் என்பது போல, அணியின் உரிமையாளர் சீனிவாசன் சுரேஷ் ரெய்னாவை விளாசி இருந்தார். கிரிக்கெட் வீரர்கள் பழைய காலத்து நடிகர்கள் போல நடந்து கொள்வதாகவும், ரெய்னாவுக்கு தான் இழக்கப் போகும் பணம் குறித்து விரைவில் தெரிய வரும் எனவும் கூறி அதிர வைத்து இருந்தார்.

பல்டி
அதன் பின் ரெய்னா தான் தன் குடும்பத்திற்காகவே இந்தியா வந்ததாகவும், விரைவில் சிஎஸ்கே அணியில் என்னை காணலாம் என்றும் பேட்டி அளித்தார். இந்த நிலையில், தற்போது ரெய்னா தன் மகன் மாதிரி என விளக்கம் கொடுத்து அசர வைத்து இருக்கிறார் சீனிவாசன்.

மகன் மாதிரி
"நான் அவரை மகன் மாதிரி தான் நடத்தி வருகிறேன். சிஎஸ்கே அணியின் ஐபிஎல் வெற்றிகளுக்கு முக்கிய காரணமே இந்த அணி எப்போதும் கிரிக்கெட் நடவடிக்கைகளில் தலையிடாது என்பதுதான். இந்தியா சிமெண்ட்ஸ் 60கள் முதல் கிரிக்கெட் நடத்தி வருகிறது. நான் எப்போதும் அதே போலவே இருப்பேன்" என்றார் சீனிவாசன்.

மீண்டும் வருவாரா?
"மீண்டும் ரெய்னா சிஎஸ்கே அணிக்கு திரும்புவேன் என கூறி உள்ளதை சுட்டிக் காட்டி கேட்ட போது, "தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். அது நான் முடிவு எடுக்கும் விஷயம் அல்ல. அணிதான் எங்களுக்கு சொந்தம். வீரர்கள் எங்களுக்கு சொந்தம் அல்ல" என்றார் சீனிவாசன்.

தோனி இருக்கிறார்
"நான் கிரிக்கெட் கேப்டன் அல்ல. நான் எப்போதும் அவர்களிடம் யார் ஆட வேண்டும்? யாரை ஏலத்தில் எடுக்க வேண்டும் என கூறியதில்லை. எந்த காலத்திலும் சிறந்த கேப்டன் எங்களிடம் இருக்கிறார். அப்புறம் ஏன் நான் கிரிக்கெட் விஷயங்களில் தலையிடப் போகிறேன்?" என்றார் சீனிவாசன்.

வாயடைத்துப் போன ரசிகர்கள்
இரண்டே நாட்களில் சுரேஷ் ரெய்னா விலகலுக்கு சீனிவாசன் பொது வெளியில் வைத்து கடுமையாக விமர்சனம் செய்து விட்டு பின் அவரைத் தன் மகன் மாதிரி என கூறி இருப்பதை கண்டு ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர்.


Click it and Unblock the Notifications