
புனே: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்களில் முதலிடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சின்ன தல சுரேஷ் ரெய்னா, அவுட்டாவதிலும் புதிய சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதில் புனேயில் நடக்கும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

இதில் டாஸை வென்ற டெல்லி பவுலிங்கை தேர்வு செய்தது. ஒரு விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் என்ற நிலையில் டுபிளாசி விக்கெட்டை சென்னை சூப்பர் கிங்ஸ் இழந்தது. அப்போது களமிறங்கிய சின்ன தல சுரேஷ் ரெய்னா, 2 பந்துகளில் ஒரு ரன் எடுத்து மேக்ஸ்வெல் பந்துவீச்சில் அவுட்டானார்.
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 168 ஆட்டங்களில் விளையாடியுள்ள சுரேஷ் ரெய்னா, 28 ஆட்டங்களில் நாட்-அவுட்டாக இருந்துள்ளார். 140 ஆட்டங்களில் ஆட்டமிழந்துள்ள அவர், 50வது முறையாக சுழற்பந்து வீச்சாளர்களால் அவுட்டாக்கப்பட்டுள்ளார்.
ஆப்-ஸ்பின் பவுலர்களால் 19 முறையும், லெக்-ஸ்பின் பவுலர்களால் 19 முறையும், ஸ்லோ லெப்ட் ஆர்ம் பவுலர்களாக் 11 முறையும், சின்னமன் பவுலர்களால் ஒரு முறையும் அவர் அவுட்டாக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடும் ராபின் உத்தப்பா, 50 முறை சுழற்பந்து வீச்சாளர்களால் அவுட்டாகி உள்ளார். அந்த சாதனையை சுரேஷ் ரெய்னா சமன் செய்துள்ளார்.