பிர்மிங்காம்: இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரராக விளங்கிய சுரேஷ் ரெய்னா, உலகின் சிறந்த பிளேயிங் லெவனை தேர்வு செய்து இருக்கின்றார். ரெய்னா தேர்வு செய்த அணியில் அவருடைய உயிர் நண்பரான தோனி இடம்பெறாதது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கின்றது.
ரெய்னா தன்னுடைய அணியில் பல தலைமுறைகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்துள்ளார். அதன்படி ரெய்னா தன்னுடைய சிறந்த பிளேயிங் லெவனில் தொடக்க வீரர்களாக சச்சின் டெண்டுல்கரையும்,பிரைன் லாராவையும் தேர்வு செய்துள்ளார்.

அதேபோன்று நடு வரிசையில் கிரிக்கெட் ஜாம்பவான் விவயன் ரிச்சர்ட்ஸ், கேரி சோபர்ஸ் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். இதேபோன்று ஆல்ரவுண்டர்கள் வரிசையில் இங்கிலாந்து சேர்ந்த இயன் போத்தம் மற்றும் ஆண்டிரூ பிளிண்டாப் ஆகியோரை ரெய்னா தேர்வு செய்துள்ளார்..
இதேபோன்று ரெய்னாவின் பந்துவீச்சு படையில் மறைந்த ஆஸ்திரேலிய சுழற் பந்து வீச்சாளர் ஜாம்பவான் வார்னே, இந்திய சுழற்ப்பந்து வீச்சு ஜாம்பவான்களான அணில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங், பாகிஸ்தான் பிரபலம் சக்லைன் முஸ்தாக் உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இதேபோன்று தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பால் ஆடம்சை இம்பேக்ட் வீரராக ரெய்னா தேர்வு செய்துள்ளார். ரெய்னா தேர்வு செய்த அணியில் தனித்துவ வேகப்பந்து வீச்சாளர்கள்,விக்கெட் கீப்பர் யாரும் இல்லை என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது. அது மட்டுமில்லாமல் ரெய்னா தன்னுடைய அணியில் தன்னுடைய உயிர் நண்பனான தோனியை தேர்வு செய்யவில்லை.
உலக கிரிக்கெட்டின் முன்னணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தோனி இருந்த நிலையில் அவரை ரெய்னா தனது அணியில் ஏன் புறக்கணித்தார் என்ற கேள்விகளும் எழுந்துள்ளது. இதனால் ரெய்னாவுக்கும் தோனிக்கும் மீண்டும் ஏதேனும் சண்டையா என்று பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் உலக கிரிக்கெட்டில் சச்சினுக்கு பிறகு அதிக ரன்களை அடித்திருக்கும் விராட் கோலி பெயரும் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.
இந்திய அணிக்காக 18 டெஸ்ட் 226 ஒரு நாள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடிய ரெய்னா கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது ரெய்னா உலக சாம்பியன்ஸ் லெஜென்ஸ் தொடரில் இந்திய சாம்பியன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார்.