
தோனி ஓய்வு அறிவிப்பு
2020 ஐபிஎல் தொடரில் ஆடும் முன் சிஎஸ்கே நடத்தி வரும் பயிற்சி முகாமில் பங்கேற்க சென்னை வந்த தோனி, திடீரென ஆகஸ்ட் 15 தான் இரவு 7.29 மணி முதல் ஓய்வு பெற்றதாக அறிவித்தார். அவரது ஓய்வு அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.

பின் தொடர்ந்த ரெய்னா
தோனி ஓய்வு குறித்து ரசிகர்கள் முழுவதுமாக தெரிந்து கொள்ளும் முன்னரே சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு அறிவித்து அதிர வைத்தார். தான் தோனியை பின்பற்றி அவரது பயணத்தில் சேர்ந்ததாக அறிவித்தார். இரண்டு முன்னணி கிரிக்கெட் வீரர்களின் ஓய்வு கிரிக்கெட் உலகை ஸ்தம்பிக்க வைத்தது.

சுதந்திர தினம்
மேலும், இருவரும் ஏன் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று தங்கள் ஓய்வை அறிவிக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. தோனி நாட்டுப்பற்று காரணமாக அறிவித்து இருக்கலாம் என சில ரசிகர்கள் கூறி வந்தனர். தற்போது இது திட்டமிட்ட அறிவிப்பு தான் என தெரிய வந்துள்ளது.

திட்டமிட்ட தோனி - ரெய்னா
தோனி ஓய்வை அறிவிக்க இருப்பது ரெய்னா உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்களுக்கு முன்பே தெரியும். ரெய்னா தானும் ஓய்வை அறிவிக்க முடிவு செய்தார். இருவரும் ஓய்வை அறிவிக்க ஆகஸ்ட் 15-ஐ தேர்வு செய்ததற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது.

ஜெர்சி எண்
இந்தியா சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகள் நிறைவு பெற்றதை குறிக்கும் வகையில் தங்கள் ஜெர்சி எண்கள் 7 (தோனி), 3 (ரெய்னா) இருப்பதால் ஆகஸ்ட் 15 ஓய்வை அறிவிக்க சரியான நாளாக இருக்கும் என இருவரும் முடிவு செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

ரெய்னா என்ன சொன்னார்?
இது பற்றி சுரேஷ் ரெய்னா கூறுகையில், "நாங்கள் சனிக்கிழமை அன்று ஓய்வை அறிவிக்க எங்கள் மனதை தயார் செய்து வைத்திருந்தோம். தோனி ஜெர்சி எண் 7, என்னுடையது 3. இரண்டையும் சேர்த்தால் 73. ஆகஸ்ட் 15 அன்று இந்தியா சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் நிறைவு அடைவதை அடுத்து அதை விட சிறந்த நாள் இருக்க முடியாது" என்றார்.

ஒன்றாக துவங்கி..
"தோனி தன் சர்வதேச கிரிக்கெட் பயணத்தை 23 டிசம்பர் 2004இல் துவக்கினார். நான் 30 ஜூலை 2005இல் அறிமுகம் ஆனேன். இருவரும் சர்வதேச கிரிக்கெட்டை கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் தான் துவக்கினோம். சிஎஸ்கே அணியில் சேர்ந்தே இருந்தோம். இப்போது சேர்ந்தே ஓய்வு பெற்றோம். ஐபிஎல்-இல் இனி சேர்ந்தே ஆடுவோம்" என்றார் ரெய்னா.

என்ன நடந்தது?
"தோனி சென்னை வந்த உடன் ஓய்வை அறிவிக்க இருக்கிறார் என்பது எனக்கு முன்பே தெரியும் என்பதால் தயாராக இருந்தேன். நான், பியுஷ் சாவ்லா, தீபக் சாஹர், கரன் சர்மா 14ஆம் தேதி ராஞ்சிக்கு தனி விமானத்தில் சென்று தோனி மற்றும் மோனு சிங்கை அழைத்து வந்தோம்" என்றார் ரெய்னா.

ரெய்னா முடிவால் அதிர்ச்சி
தோனி 39 வயதான நிலையில் ஓய்வை அறிவித்தார். ஆனால் ரெய்னா 33 வயதிலேயே ஓய்வை அறிவித்தது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ரோஹித் சர்மா, ஹர்பஜன் சிங் போன்றோர் இது குறித்து ட்விட்டரில் கூறி உள்ளனர்.


Click it and Unblock the Notifications