மும்பை: 14 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷி இன்னும் சில ஆண்டுகளில் இந்திய அணிக்காக அறிமுகம் செய்யப்படுவார் என்று சிஎஸ்கே ஜாம்பவான் சுரேஷ் ரெய்னா கணித்துள்ளார். ஆயுஷ் மாத்ரே சிறப்பாக ஆடி வந்தாலும், வைபவ் சூர்யவன்ஷியின் அச்சமில்லாத ஆட்டம் இந்திய அணிக்கு மிகப்பெரிய சாதகத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட்டின் புதிய சென்ஷேனாக வளர்ந்து வருகிறார் வைபவ் சூர்யவன்ஷி. 14 வயதிலேயே ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி இருக்கும் வைபவ் சூர்யவன்ஷி, குறைந்த பந்துகளில் சதம் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதன்பின் இந்திய யு19 அணிக்காக ஆடி வரும் அவர், இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அந்த பயணத்தில் 7 இன்னிங்ஸில் விளையாடி சுமார் 300க்கும் அதிகமான ரன்களை விளாசி தள்ளினார். இதனால் வைபவ் சூர்யவன்ஷி அடுத்த சச்சினாக உருவாகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 16 அல்லது 17 வயதிற்குள் இந்திய அணிக்குள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளதாக ரசிகர்களிடையே விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சிஎஸ்கே ஜாம்பவான் சுரேஷ் ரெய்னா வைபவ் சூர்யவன்ஷியை பாராட்டி இருக்கிறார். அதில் சுரேஷ் ரெய்னா பேசுகையில், வைபவ் சூர்யவன்ஷி மற்றும் ஆயுஷ் மாத்ரே இருவரும் சிறப்பாக தயாராகி வருகின்றனர். இருவரில் வைபவ் சூர்யவன்ஷி விரைவாக இந்திய அணிக்குள் கொண்டு வரப்படுவார் என்று நினைக்கிறேன்.
அதற்கு காரணம் வைபவ் சூர்யவன்ஷியின் பயமில்லாத ஆட்டம். மாத்ரேவும் சிறப்பாக ஆடுகிறார். ஆனால் வைபவ் சூர்யவன்ஷி எக்ஸ் ஃபேக்டர் வீரர். இவரைப் போன்ற திறமையாளர்கள் கிடைப்பது அரிதான விஷயம். அண்மையில் இங்கிலாந்து மண்ணில் சதம் விளாசி இருந்தார். இது பீகாரின் வலிமையையும் சொல்வதாக நினைக்கிறேன்.
சமஸ்திபூர் போன்ற ஒரு ஊரில் இருந்து இன்னும் சொல்லப் போனால் கிராமத்தில் இருந்து இப்படியொரு வீரர் வருவார் என்று யாருமே நினைக்கவில்லை. நூற்றாண்டுக்கு ஒருமுறை சில வீரர்கள் இப்படி கிடைப்பார்கள். ஆய்ஷ் மாத்ரே 17 வயதில் இப்படியொரு ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரின் பேட்டிங் நிச்சயம் என்னை கவர்ந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.