இவன் எல்லாம் எங்க அடிக்க போறான்? தோனியுடன் முதல் சந்திப்பு நடந்தது எப்படி? ரெய்னாவின் சுவாரஸ்ய பேட்டி
மும்பை : இந்திய கிரிக்கெட்டில் சிறந்த நண்பர்களாக விளங்கியவர்கள் என்றால் அது தோனியும் ரெய்னாவும் தான். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2008 ஆம் ஆண்டு முதல் விளையாடி வந்த தோனியும் ரெய்னாவும் உற்ற நண்பர்களாக மாறினார்கள்.
எந்த அளவிற்கு நெருங்கியவர்கள் என்றால் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அதே நாளில் ரெய்னாவும் ஓய்வு பெற்று ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.
இந்த நிலையில் ரெய்னா தோனியை முதல் முறையாக எப்போது சந்தித்தேன் என்பது குறித்து பேட்டி ஒன்றில் சுவாரசிய தகவலுடன் குறிப்பிட்டிருக்கிறார்.

தோனியை பார்த்தோம்
அது 2004 ஆம் ஆண்டு கிழக்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டலம் அணிகளுக்கு இடையிலான உள்நாட்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அப்போது நாங்கள் ஜார்க்கண்ட்டிலிருந்து நீண்ட முடியை வைத்திருக்கும் ஒரு வீரர் அதிரடியாக விளையாடுகிறார் என்று கேள்விப்பட்டோம். அப்போது நாங்கள் ஒரு நாள் ஹோட்டலில் தோனியை பார்த்தோம்.

வீரரின் கமெண்ட்
அவர் ஒரு ஓரத்தில் அமர்ந்து கொண்டு பட்டர் சிக்கனும், ரொட்டியையும் சாப்பிட்டு கொண்டு இருந்தார். இதை பார்த்து எங்கள் அணியில் வீரர் ஒருவர் இந்த வீரர் பற்றியா எல்லோரும் பேசி வருகிறார்கள்? எனக்கென்னவோ இவர் நமக்கு எதிராக பெரிய ஸ்கோர் ஒன்றும் அடிக்க மாட்டார் என்று தோன்றுகிறது. நமக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

பொளந்து கட்டிய தோனி
பாருங்கள் அவர் அவருடைய உணவை மகிழ்ச்சியாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் என்று கூறியதாக சுட்டி காட்டினார். ஆனால் போட்டி நாளன்று எந்த வீரர் அப்படி சொன்னாரோ அவருடைய ஓவரில் தோனி பொளந்து எடுத்து விட்டதாக ரெய்னா குறிப்பிட்டார். இதன் காரணமாக அந்த வீரர் தன்னுடைய பேச்சை வாபஸ் பெற்றுக் கொண்டதாகவும் அவர்கள் கூறினார்.

ரெய்னாவின் நிலை
தோனியின் நெருங்கிய நண்பராக கருதப்பட்ட ரெய்னா சிஎஸ்கே அணிக்காக 2021 ஆம் ஆண்டு தான் கடைசியாக விளையாடினார். அதன் பிறகு 2022 ஆம் ஆண்டு ஏலத்தில் ரெய்னாவை எந்த அணியும் எடுக்கவில்லை. இதனால் அனைத்து கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்ற ரெய்னா ரோட் சேஃப்டி லீக், லெஜெண்ட் லீக் கிரிக்கெட், அபுதாபி டி20 லைவ் போன்ற ஆட்டங்களில் விளையாடி வருகிறார்.


Click it and Unblock the Notifications