
சிஎஸ்கே அணியில் கொரோனா வைரஸ்
சுரேஷ் ரெய்னா 2020 ஐபிஎல் தொடரில் ஆட சிஎஸ்கே அணியுடன் துபாய் சென்றார். மற்ற வீரர்களுடன் ஒரு வாரம் குவாரன்டைனில் இருந்தார். அதுவரை எந்த பிரச்சனையும் இருப்பதாக யாரும் நினைக்கவில்லை. அதன் பின் சிஎஸ்கே அணியில் 13 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.

அதிர்ச்சி
அதை அடுத்து சுரேஷ் ரெய்னா திடீரென இந்தியா திரும்பினார். அவர் இனி 2020 ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என சிஎஸ்கே அணி அறிவித்தது இன்னும் அதிர்ச்சி அளித்தது. ஏன் ரெய்னா இந்தியா சென்றார்? என்ற கேள்வி எழுந்தது. அதற்கு பல வதந்திகள் விடைகளாக சொல்லப்பட்டன.

கண்டிப்பு
ரெய்னா 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதை கடுமையாக கண்டித்து இருந்தார் சிஎஸ்கே அணி உரிமையாளர் சீனிவாசன். ஆனால், மறுநாள் சுரேஷ் ரெய்னா தான் குடும்பத்தை சந்திக்கவே இந்தியா வந்ததாக கூறினார். தன் அத்தை வீட்டில் நடந்த தாக்குதலும் ஒரு காரணம் என்றார்.

சுமூகமான உறவில் இல்லை
மேலும், தான் சீனிவாசனுடன் பேசி விட்டதாகவும் கூறினார் ரெய்னா. இதற்கிடையே அவர் மீண்டும் சிஎஸ்கே அணியில் ஆட இருப்பதாகவும் கூறினார். ஆனாலும், சிஎஸ்கே நிர்வாகத்துடன் ரெய்னா சுமூகமான உறவில் இல்லை என கூறப்படுகிறது.

விதிமீறல்
துபாயில் சுரேஷ் ரெய்னா கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீறியதாகவும், ஏற்கனவே அணியில் சிலருக்கு பாதிப்பு உள்ள நிலையில் அது குறித்து சிஎஸ்கே அணி நிர்வாகம் கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.

வாட்ஸ்அப் குரூப்பில் நீக்கம்
அப்போது கோபம் அடைந்தே ரெய்னா இந்தியா திரும்பி விட்டதாக ஒரு தகவல் கூறப்படுகிறது. அவர் இந்தியா திரும்பிய உடனே அவர் அணியின் வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாக தெரிய வந்துள்ளது. இதன் மூலம் ரெய்னா சிஎஸ்கே அணிக்கு திரும்புவது சாத்தியமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

வாய்ப்பு கேட்ட ரெய்னா
மறுபுறம் சுரேஷ் ரெய்னா, கேப்டன் தோனி மற்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங்கை தொடர்பு கொண்டு தான் மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு கேட்டுள்ளதாகவும், அதற்கு இன்னும் எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

விமர்சகர்கள் கருத்து
இதுவரை சிஎஸ்கே அணி சுரேஷ் ரெய்னாவுக்கு மாற்று வீரரை தேர்வு செய்யாததன் மூலம் அவரை இன்னும் முற்றிலுமாக சிஎஸ்கே கைவிட்டு விடவில்லை என விமர்சகர்கள் கூறி வருகின்றனர். தற்போது ரெய்னா இந்தியாவில் தான் இருக்கும் இடத்திலேயே பயிற்சி மேற்கொண்டு வருவதாக கூறி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications