
2020 ஐபிஎல்
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகமாக உள்ள காரணத்தால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது 2020 ஐபிஎல் தொடர். அதற்காக பிசிசிஐ அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. ஐபிஎல் அணிகள் அனைத்தும் அந்த நாட்டிற்கு சென்று ஒரு வார காலம் குவாரன்டைனில் இருந்துள்ளன.

துபாயில் சிஎஸ்கே அணி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துபாயில் முகாமிட்டு இருந்தது. ஒரு வார காலம் முடிந்தும் அந்த அணி மட்டும் பயிற்சி செய்யத் துவங்கவில்லை. அது பற்றி பலரும் கேட்ட நிலையில், சிஎஸ்கே அணியில் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

சிஎஸ்கே வீரருக்கு கொரோனா வைரஸ்
இந்திய அணியில் கடந்த ஆண்டு இடம் பெற்ற வேகப் பந்துவீச்சாளர் தீபக் சாஹருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவர் மட்டுமின்றி, வீரர்கள் அல்லாத 12 நபர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

சுரேஷ் ரெய்னா
இந்த நிலையில், அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா இந்தியா திரும்பி உள்ளதாக சிஎஸ்கே அணி ட்விட்டர் பதிவு மூலம் அறிவித்துள்ளது. அவர் தனிப்பட்ட காரணங்களால் நாடு திரும்பி இருப்பதாகவும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

ஐபிஎல்-இல் ஆட மாட்டார்
மேலும், இந்த ஐபிஎல் சீசனில் சுரேஷ் ரெய்னா பங்கேற்க மாட்டார் என்ற அதிர்ச்சித் தகவலையும் கூறி உள்ளது சிஎஸ்கே அணி. ஆகஸ்ட் 15 அன்று ரெய்னா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் அதிர்ச்சி
இந்த ஐபிஎல் சீசனில் ஓய்வை அறிவித்த தோனி, சுரேஷ் ரெய்னா கலக்கப் போகிறார்கள் என காத்துக் கொண்டு இருந்த ரசிகர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. பலரும் சிஎஸ்கே அணியில் என்ன தான் நடக்கிறது? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ஐபிஎல் நிலை
சிஎஸ்கே அணியில் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது பற்றி அறிக்கை வெளியிடாமல் இருக்கிறது பிசிசிஐ. மேலும், ஐபிஎல் தொடருக்கான அட்டவணையை இன்னும் பிசிசிஐ வெளியிடவில்லை. 2020 ஐபிஎல் தொடர் நடக்குமா?


Click it and Unblock the Notifications