மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா இளம் பருவத்தில் அபாயகரமான வீரராக இருப்பார். எத்தகைய பந்துவீச்சு கொண்ட அணியை எதிர்கொண்டாலும் பயமின்றி விளையாடுவதில் வல்லவர்.
இன்னும் சொல்லப்போனால் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் டி20 டெஸ்ட், ஒருநாள் என அனைத்து விதமான போட்டிகளிலும் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்றால் அது சுரேஷ் ரெய்னா தான். இதே போன்று ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தூணாக சுரேஷ் ரெய்னா விளங்கினார்.

இந்த தருணத்தில் தம்மை போல் பயமின்றி விளையாடும் இளம் தலைமுறை வீரர்கள் யார் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரெய்னா, மூன்று வீரர்கள் பெயரை குறிப்பிட்டிருக்கிறார். அதில் சுரேஷ் ரெய்னா முதலில் சொன்ன பெயர் அபிஷேக் ஷர்மா தான். இந்திய அணிக்காக விளையாடிய இரண்டாவது போட்டியிலேயே சதம் அடித்து அசத்தியவர் தான் அபிஷேக் ஷர்மா.
இது குறித்து பேசிய ரெய்னா, அபிஷேக் ஷர்மா விளையாடும் விதத்தை பார்க்கும்போது எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது. அவர் பயமின்றி விளையாட கூடியவர். அதுமட்டுமில்லாமல் யுவராஜ் சிங் தலைமையில் கீழ் அவர் பயிற்சி எடுத்து இருக்கின்றார். இதேபோன்று ஜெய்ஸ்வால் மற்றும் பிரியான்ஸ் ஆர்யாவும் பயமின்றி விளையாடக்கூடிய வீரராக உள்ளனர்.
பிரியான்ஸ் ஆர்யா ஆதிக்கம் செலுத்தக்கூடிய வீரராக நிச்சயம் இருக்கின்றார். ஆனால் ஜெய்ஸ்வால் முற்றிலும் வித்தியாசமான வீரர். அவரிடம் ஒரு போட்டிக்கு எப்படி தயாராக வேண்டும் என்ற நெறிமுறைகள் உள்ளன. சண்டை போடும் திறனும் அவருக்கு இருக்கின்றது. அது மட்டும் இல்லாமல் சவாலான டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக அவர் சதம் அடித்திருக்கின்றார்.
இது மட்டும் இல்லாமல் விளையாட்டின் விழிப்புணர்வும் அவரிடம் சிறப்பாக உள்ளது என்று ரெய்னா பாராட்டி உள்ளார். இதேபோன்று இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இசான் கிஷனை அண்டர்ரேட்டட் வீரர் என்று ரெய்னா குறிப்பிட்டுள்ளார். அவருடைய திறமை இன்னும் சரியாக பயன்படுத்தவில்லை என்று கருதுவதாக கூறியுள்ளார்.