
ஐபிஎல் ஏலம் விவரம்
இந்த 87 இடங்களில் ஏதேனும் ஒரு இடத்தை பிடிப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து 991 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். இதில் 405 வீரர்களை ஏலத்திற்காக இறுதி செய்துள்ளது பிசிசிஐ. அணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப சில வீரர்களும் ஏலத்தின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் எந்தெந்த அணிகள், யாரை வாங்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ரெய்னாவின் கணிப்பு
இந்நிலையில் ஐபிஎல் சூப்பர் ஸ்டாரான சுரேஷ் ரெய்னா முக்கிய தகவலை கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஏலத்தில் பல வீரர்கள் இருந்தாலும் அயர்லாந்தின் இளம் வீரர் ஜோஸுவா லிட்டில் தனி கவனத்தை பெறவுள்ளார். சமீபத்தில் நடந்த உலகக்கோப்பையில் அவரின் ஆட்டம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவருடன் நான் இணைந்தும் விளையாடியுள்ளேன் என்பதால் கூறுகிறேன் நிச்சயம் கவனம் பெறுவார் என ரெய்னா கூறியுள்ளார்.

என்ன ஸ்பெஷல்
வெறும் 23 வயதே ஆகும் ஜோஸுவா லிட்டில், இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஆகும். 2022ம் ஆண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை எடுத்தவர்கள் பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறார். இந்தாண்டில் மட்டும் 26 போட்டிகளில் ஆடி 39 விக்கெட்களை கைப்பற்றி அசத்தியுள்ளார். அவரின் எகானமி ரேட் 7.59 ரன்கள் மட்டுமே ஆகும். இன்னும் சுவாரஸ்யமாக சொல்ல வேண்டும் என்றால் நியூசிலாந்து அணியையே டி20 உலகக்கோப்பையில் ஆட்டம் காண வைத்தார்.

சுவாரஸ்ய தகவல்
சமீபத்தில் நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக அடுத்தடுத்து 3 விக்கெட்களை எடுத்து ஹாட்ரிக் படைத்தார். டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அயர்லாந்து அணிக்காக ஹாட்ரிக் விக்கெட்களை எடுத்த 2வது வீரர் இந்த 23 வயது புயல் தான். இவரும் சுரேஷ் ரெய்னாவும் அபுதாபி டி10 லீக் தொடரில் ஒரே அணிக்காக விளையாடியதால், அவரின் திறமை குறித்து ரெய்னா நன்கு அறிந்துவைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











