
சிஎஸ்கே அணியில் கொரோனா
2020 ஐபிஎல் தொடரில் பங்கேற்க சென்ற சிஎஸ்கே அணி துபாயில் முகாமிட்டு இருந்தது. அங்கே இரண்டு வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், சுரேஷ் ரெய்னா திடீரென இந்தியா திரும்பினார்.

அதிருப்தியா?
முதலில் அவர் தனிப்பட்ட காரணங்களால் இந்தியா திரும்பியதாக கூறப்பட்ட நிலையில் அவர் சிஎஸ்கே நிர்வாகத்துடன் அதிருப்தி ஏற்பட்டு தான் இந்தியா சென்றார் என தகவல்கள் வலம் வந்தன. ஹோட்டல் அறையில் பால்கனி சரியில்லை என கூறினார் என்றும், தோனியுடன் விரிசல் என்றும் கூறப்பட்டது.

இந்தியா திரும்பிய காரணம்
ஆனால், தற்போது சுரேஷ் ரெய்னா தான் இந்தியா திரும்பிய காரணம் குறித்து கிரிக்பஸ் இணைய தளத்துக்கு அளித்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். தன் குடும்பத்திற்காகவே தான் இந்தியா திரும்பியதாக கூறி உள்ளார் சுரேஷ் ரெய்னா.

கடினமான முடிவு
அவரது அத்தை வீட்டில் நடந்த கொடூர தாக்குதலில் மாமா, மற்றும் அவரது மகன் உயிரிழந்தனர். மேலும், சிலர் காயத்துடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகின்றனர். அவர்களைக் காணவே இந்தியா வந்ததாக கூறினார். இது கடினமான முடிவு என்றும் அவர் கூறினார்.

தோனி மிக முக்கியமானவர்
சிஎஸ்கே அணியும் என் குடும்பம் தான். தோனி மிக முக்கியமானவர். எனக்கும், சிஎஸ்கேவுக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை. யாரும் 12.5 கோடியை எந்த காரணமும் இன்றி விட்டுவிட்டு வந்து விட மாட்டார்கள் என விளக்கம் கூறினார் ரெய்னா.

4 - 5 ஆண்டுகளுக்கு சிஎஸ்கே தான்
நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் இளமையுடன் தான் இருக்கிறேன். நான் சிஎஸ்கே அணிக்காக அடுத்த 4 - 5 ஆண்டுகளுக்கு ஆடுவதை எதிர் நோக்கி இருக்கிறேன் என்றார் ரெய்னா. இதன் மூலம் தான் சிஎஸ்கே அணியை விட்டு பிரியவில்லை என ஆணித்தரமாக கூறி உள்ளார்.

சிஎஸ்கே முகாமில்..
அது மட்டுமின்றி, தற்போது இந்தியா வந்து தான் தனிமையில் இருக்கும் நிலையில், தான் பயிற்சி செய்து வருவதாகவும், எப்போது வேண்டுமானாலும் தன்னை சிஎஸ்கே அணியின் முகாமில் மீண்டும் பார்க்கலாம் என்றும் கூறி ரசிகர்களுக்கு நல்ல செய்தி கூறி உள்ளார்.

தந்தை போன்றவர்
சரி, இது நல்ல செய்திதான்.. ஆனால், சிஎஸ்கே உரிமையாளர் சீனிவாசன் ரெய்னாவை தாக்கி பேட்டி அளித்தாரே.. அது? அதைப் பற்றியும் ரெய்னா விளக்கம் அளித்துள்ளார். சீனிவாசன் தந்தையைப் போன்றவர் என்றும், தந்தை, மகனை கண்டிப்பது போல அவர் கண்டித்தார் என்றும் கூறி உள்ளார்.

உண்மையான காரணம் தெரியாது
மேலும், அவருக்கு முதலில் தான் இந்தியா செல்லும் உண்மையான காரணம் தெரியாது என்றும், தற்போது அவருக்கு அது தெரியப்படுத்தப்பட்டது. அவர் எனக்கு மெசெஜ் கூட அனுப்பி உள்ளார். நாங்கள் அதுபற்றி பேசி உள்ளோம் என்றும் கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ரெய்னா. சிஎஸ்கே ரசிகர்களுக்கு இதை விட நல்ல செய்தி இருக்க முடியாது.


Click it and Unblock the Notifications











