
சுமூகமான உறவில் இல்லை
சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணி நிர்வாகம் மற்றும் தோனியுடன் சுமூகமான உறவில் இல்லை என கூறப்படுகிறது. தோனி - ரெய்னா இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் கூட கூறப்படுகிறது. சென்னையில் பயிற்சி முகாமில் இருந்த வரை தோனி - ரெய்னா ஒற்றுமையாக இருந்த காட்சிகளை அனைவரும் பார்த்த நிலையில் இது அதிர்ச்சி தகவலாக அமைந்தது.

தோனி - ரெய்னா இடையே விரிசல்
துபாயில் தன் ஹோட்டல் அறையில் பால்கனி இல்லை என சுரேஷ் ரெய்னா அதிருப்தியில் இருந்ததாகவும், தோனிக்கு கொடுக்கப்பட்ட அறை போல தனக்கும் கொடுக்க வேண்டும் என கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் தோனி - ரெய்னா இடையே விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கொரோனா பாதிப்பு
அடுத்ததாக, சிஎஸ்கே அணி கடும் கட்டுப்பாடுகளுடன் இருந்த நிலையிலும் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அதனால், சிஎஸ்கே அணி கூடுதல் நாட்கள் குவாரன்டைனில் இருக்க நேர்ந்தது. அதனால், ரெய்னாவின் ஹோட்டல் அறை பிரச்சனை தொடர்ந்ததாக கூறப்படுகிறது.

பெரிய அளவில் விரிசல்
அவர் கொரோனா வைரஸ் குறித்த அச்சத்திலும் இருந்ததால் இந்தியாவுக்கு திரும்பி விட்டதாக சிஎஸ்கே வட்டாரம் கூறுகிறது. சிஎஸ்கே அணி நிர்வாகம் ரெய்னா தனிப்பட்ட காரணங்களால் இந்தியா திரும்பியதாக கூறி சமாளித்து இருந்தது. ஆனால், உண்மையில் பெரிய அளவில் விரிசல் விழுந்துள்ளது.

சிஎஸ்கே அணியில் ஆடமாட்டார்
இது குறித்து சென்னையில் சிஎஸ்கே வட்டாரத்துக்கு நெருக்கமானவர்கள் சிலர் கூறுகையில், இனி சுரேஷ் ரெய்னா எப்போதும் சிஎஸ்கே அணிக்காக ஆட மாட்டார் என்கிறார்கள். இது மேலும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. ஏன் இந்த நிலை?

2008 முதல்
2008இல் சிஎஸ்கே அணி உருவானது முதல் அணியில் தோனியுடன் இருக்கும் வீரர் சுரேஷ் ரெய்னா. அணியின் துணை கேப்டனாகவும் இருக்கிறார். தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெற்றால் ரெய்னா கேப்டனாக அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது.

ஹோட்டல் அறைக்காகவா?
இந்த நிலையில் தான் இந்த விரிசல். இது வெறும் ஹோட்டல் அறைக்காகத் தான் வந்ததா? என்ற கேள்வியும் பலருக்கு உள்ளது. ஆனால், ஏதோ ஒரு விஷயத்தில் ரெய்னா நடந்து கொண்ட விதம் சிஎஸ்கே அணி நிர்வாகத்தை அதிருப்தி அடைய வைத்துள்ளது.

வெளிப்படையாக பேச காரணம் என்ன?
அதை அடுத்தே சிஎஸ்கே உரிமையாளர் சீனிவாசன் ரெய்னா விலகலைப் பற்றி வெளிப்படையாக பேட்டி அளித்துள்ளார். ரெய்னா இனி சிஎஸ்கே அணியில் வேண்டவே வேண்டாம் என்ற முடிவு எடுத்த பின்னரே அவர் பேட்டி அளித்திருக்கக் கூடும் என்கிறார்கள்.

வேறு அணியில் ரெய்னா?
சிஎஸ்கே அணியில் இருந்து விலகி உள்ள ரெய்னா வேறு ஐபிஎல் அணிக்கு தாவுவாரா? என்றும் சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த ஐபிஎல் சீசனில் மாற்றத்துக்கு வாய்ப்பு இல்லை. ஒருவேளை ரெய்னா அந்த முடிவை எடுத்தால், அடுத்த ஆண்டு மட்டுமே அதற்கு வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications











