
மோசமான தகவல்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து தொடர்ந்து மோசமான தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. இரண்டு வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், 2020 ஐபிஎல் தொடர் திட்டமிட்டபடி நடக்குமா? என்ற சந்தேகமும் உள்ளது.

ஐபிஎல் அணிகள் கோபம்
மற்ற ஐபிஎல் அணிகள் சிஎஸ்கே மீது கோபத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. பிசிசிஐ இது குறித்து அமைதி காத்து வருவது மற்ற அணிகளை மேலும் எரிச்சலடைய வைத்துள்ளது. இத்தனை சிக்கல்களுக்கு மத்தியில் தான் சுரேஷ் ரெய்னா 2020 ஐபிஎல் தொடரை விட்டு விலகி உள்ளார்.

ஏன் விலகினார் ரெய்னா?
முதலில் அவர் தனிப்பட்ட காரணங்களால் விலகியதாக சிஎஸ்கே அணி நிர்வாகம் கூறி இருந்தது. ரெய்னாவின் உறவினர் வீட்டில் நடத்த தாக்குதல் மற்றும் இறப்பு, சிஎஸ்கே முகாமிற்குள் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் அச்சம் என அவரது விலகலுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது.

தோனியுடன் பிளவு?
ஆனால், ஞாயிறு இரவு சிஎஸ்கே உரிமையாளர் சீனிவாசன் அளித்த பேட்டியின் மூலம் சிஎஸ்கே நிர்வாகம் மற்றும் கேப்டன் தோனியுடன் ரெய்னா சுமூகமாக நடந்து கொள்ளவில்லை, தோனியுடன் பிளவு என்றெல்லாம் தகவல்கள் வந்தது. இது சீனிவாசன் தரப்பில் இருந்து தெரிய வந்தது. ரெய்னா தன் நிலைப்பாட்டை இதுவரை கூறவில்லை. என்ன நடந்தது?

அறையில் பால்கனி இல்லை
சுரேஷ் ரெய்னா சென்னையில் இருந்து துபாய் சென்று ஒரு வாரம் மற்ற வீரர்களைப் போல தனி அறையில் குவாரன்டைனில் இருந்தார். அப்போது தனக்கு வழங்கப்பட்ட அறையில் பால்கனி இல்லை என அவர் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தோனி அறை போல வேண்டும்
அதிலும், தோனிக்கு வழங்கப்பட்ட அறையில் பால்கனி இருப்பதால் அதே போன்ற அறையை தனக்கும் வழங்குமாறு அவர் கேட்டார் எனவும் கூறப்படுகிறது. சிஎஸ்கே நிர்வாகம் மற்றும் தோனி இது குறித்து அவரிடம் சமாதானம் செய்தும் அவர் அதிருப்தியில் இருந்துள்ளார்.

வெற்றி தலையில் ஏறி விடும்
பின் சிஎஸ்கே அணியில் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து புகார் அளித்து இந்தியாவுக்கு திரும்பி உள்ளார். இது பற்றி பேசிய சீனிவாசன், வெற்றி சிலரது தலையில் ஏறி விடும் என ரெய்னா பெயரை குறிப்பிடாமல் விளாசினார்.

ரெய்னாவுக்கு பதில்..
அது மட்டுமின்றி, சுரேஷ் ரெய்னா இழப்பு ஒரு பெரிய விஷயமே இல்லை என்பது போல பேசிய அவர் ரெய்னா இல்லாத நிலையில் இளம் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெயிக்வாட் அணியில் வாய்ப்பு பெறக் கூடும் என குறிப்பிட்டார்.

கொரோனா பாதித்த வீரர்
ருதுராஜ் கெயிக்வாட்டிற்கு தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், சீனிவாசன் இந்த கருத்தை கூறி உள்ளார். "ருதுராஜ் கெயிக்வாட் சிறந்த பேட்ஸ்மேன், யாருக்கு தெரியும், அவர் கூட இந்த ஐபிஎல்-இன் நட்சத்திர வீரராக இருக்க முடியும்." என்றார் சீனிவாசன்.

11 கோடி
மேலும். ரெய்னா தன் இழப்பை உணர்வார் என கூறிய அவர், "இன்னும் இந்த சீசன் துவங்கவில்லை. ரெய்னா தான் எதை இழக்கிறோம் என்பதை உணர்வார். முக்கியமாக எவ்வளவு பணத்தை இழக்கப் போகிறோம் என்பதை உணர்வார்" என்றார். ரெய்னாவிற்கு 11 கோடி சம்பளம் அளிக்கிறது சிஎஸ்கே. அதை ரெய்னா உணர்வார் என சூசகமாக குறிப்பிட்டுள்ளார் சீனிவாசன்.


Click it and Unblock the Notifications