
டெல்லி: இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் விருத்தமன் சாகாவுக்கு என்ன காயம் என்பது குறித்த நீண்ட குழப்பங்களுக்குப் பிறகு, அவருக்கு தோள்பட்டையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2014ல் டெஸ்ட் போட்டிகளில் இருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்ற பிறகு, இந்திய டெஸ்ட் அணியின் நிரந்தர விக்கெட் கீப்பராக சாகா இருந்தார். கடந்த சில மாதங்களாகவே காயங்களால் அவதிபட்டு வந்தார்.

ஐபிஎல் தொடரின்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அவர், காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாடவில்லை. அப்போது கைவிரலில் முறிவு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. அதன்பிறகு, அவருக்கு முதுகு வலி இருந்ததாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், ஜூன் மாதம் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடவில்லை. அதைத் தொடர்ந்து தற்போது இங்கிலாந்தில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியிலும் அவர் பங்கேற்கவில்லை.

இதனிடையில் பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு, அவருக்கு தோள்பட்டையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதன்படி, மான்செஸ்டரில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
பிசிசிஐ மருத்துவக் குழுவின் மேற்பார்வையில இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இதுவரை 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சாகா, 3 சதம் உள்பட 1,164 ரன்கள் எடுத்துள்ளார். தற்போது சாகாவுக்கு பதிலாக இங்கிலாந்து தொடரில் தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக உள்ளார்.