கயானா : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றிருந்தால் அந்த அணி தொடரை கைப்பற்றி இருக்கும்.
இதனால் இந்திய அணி மிகப்பெரிய நெருக்கடியில் இந்த போட்டியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதில் தொடக்க வீரர் பிராண்டன் கிங் 42 ரன்களும் கைல் மேயர்ஸ் 25 ரன்களும், சார்லஸ் 12 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அதிரடி வீரர் நிக்ரோஸ் பூரான் அதிரடியாக விளையாடி 12 பந்துகளில் 20 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் அபார பந்துவீச்சால் பெவிலியன் திரும்பினார். சிம்ரன் ஹேட்மயர் 9 ரன்களில் வெளியேற வெஸ்ட் இண்டீஸ் அணி 123 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அப்போது களத்தில் கேப்டன் ரோமன் போவெல் தனி ஆளாக நின்று இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்தார். 19 பந்துகளை எதிர்கொண்ட அவர் 40 ரன்கள் எடுத்தார். இதில் மூன்று சிக்ஸர்களும் ஒரு பவுண்டரியும் அடங்கும். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.
இந்தியா பந்துவீச்சு தரப்பில் குல்தீப் யாதவ் நான்கு ஓவர்கள் வீசி 28 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனை அடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அறிமுக வீரர் ஜெய்ஸ்வால் ஒரு ரன்னிலும், கில் 6 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க இந்திய அணி தடுமாறியது.
இந்த போட்டியும் அவ்வளவுதான் என ரசிகர்கள் எதிர்பார்த்த போது நம்பிக்கை நட்சத்திரமாக களத்திற்கு தோன்றி வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை வெளுத்து கட்டினார் சூரியகுமார் யாதவ். யார் பந்து வீசினாலும் பவுண்டரி தான் என அடித்து வந்த சூரிய குமார் யாதவ் 23 பந்துகளில் எல்லாம் அரைசதம் எடுத்தார். இந்த ஆடுகளத்தில் தான் தடுமாறுகிறீர்களா என்று மற்ற வீரர்களை பார்த்து கேட்பது போல் சூரியகுமார் யாதவ் இன்னிங்ஸ் இருந்தது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தாம் ஏன் முதல் இடத்தில் இருக்கிறேன் என்பதை மீண்டும் சூரிய குமார்யாதவ் இந்த இன்னிங்ஸ் மூலம் பறைசாற்றினார்.
மறுமுனையில் திலக் வர்மா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த சூரிய குமார் யாதவ் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஒரு புறம் மழையும் மறுபுறம் வெயிலும் அடித்த நிலையில் சூரிய குமார் களத்தில் தன்னுடைய மேஜிக்கை நிகழ்த்தினார். 44 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட சூர்ய குமார் 83 ரன்களை குவித்தார்.இதில் மொத்தமாக 10 பவுண்டரிகளும் நான்கு சிக்சர்களும் அடங்கும். இதனை அடுத்து களத்திற்கு வந்த ஹர்திக் பாண்டியா நிதானமாக விளையாட சூரியகுமார் விட்டுச்சென்ற வேலையை திலக் வருமா கையில் எடுத்துக் கொண்டு பட்டையை கிளப்பினார்.
நான்கு பவுண்டரிகள் ஒரு சிக்சர் அடிக்க 37 பந்துகளில் அவர் 49 ரன்கள் எடுத்தார். ஹர்திக் பாண்டியா சிக்ஸர் அடித்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். 17.5 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி 164 ரன்கள் எடுத்தது . இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. அடுத்த டி20 போட்டி வரும் 12ஆம் தேதி அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் நடைபெறுகிறது.