மும்பை: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 2026 டி20 உலகக் கோப்பையின் முடிவு எப்படி இருந்தாலும், தற்போதைய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மாற்றப்படுவது உறுதி எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்பின் சுப்மன் கில் டி20 அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது.
அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு, இந்திய அணியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அதிரடியான முடிவுகளை எடுத்து வருகிறது. ரோஹித் சர்மாவின் மூன்று ஆண்டு கால ஒருநாள் கேப்டன்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, சுப்மன் கில்லை புதிய ஒருநாள் அணி கேப்டனாக அறிவித்ததே இதன் முதல் படி. ஆனால், இது ஒரு தொடக்கம் மட்டுமே. சுப்மன் கில்லை மையமாக வைத்து பிசிசிஐ ஒரு மெகா திட்டத்தை வகுத்துள்ளது. அதன் இறுதி அத்தியாயம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அரங்கேற உள்ளது.

2024 டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி என அடுத்தடுத்து இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்ற கேப்டனான ரோஹித் சர்மாவை மாற்றுவது என்பது எளிதான முடிவு அல்ல. ஆனால், ரோஹித் சர்மாவை ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து நீக்கியபோது, தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் மிகத் தெளிவாக ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார். "இந்த முடிவு, கோப்பைகளை வென்றதை வைத்து எடுக்கப்படவில்லை. இது எதிர்காலத்தை நோக்கிய ஒரு பார்வை" என்றார்.
அதே "ஃபார்முலா"தான் தற்போது சூர்யகுமார் யாதவ் விஷயத்திலும் பயன்படுத்தப்பட உள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இந்தியாவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு, சுப்மன் கில் டி20 அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்பார் என்று கூறப்படுகிறது. அந்த உலகக் கோப்பையை சூர்யகுமார் யாதவ் வென்றாலும் கூட, இந்த முடிவு மாறாது.
ரோஹித் சர்மா சாம்பியன்ஸ் டிராபியை வென்றது எப்படி ஒருநாள் கேப்டன்சி மாற்றத்தைப் பாதிக்கவில்லையோ, அதேபோல டி20 உலகக் கோப்பையின் முடிவும் சூர்யகுமாரின் கேப்டன்சியைத் தீர்மானிக்காது என்பதே பிசிசிஐயின் நிலைப்பாடாக உள்ளது. ஆனால், சுப்மன் கில்லை வலிந்து கேப்டனாக்க முயற்சிப்பதும் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அஜித் அகர்கர், "ரோஹித் சர்மா ஒரு வெற்றிகரமான கேப்டன். அவரை மாற்றுவது கடினமான முடிவுதான். ஆனால், சில சமயங்களில் நாம் அணியின் எதிர்காலத்தையும், நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும். அடுத்த உலகக் கோப்பைக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன. அதற்குள் புதிய கேப்டனுக்குப் போதுமான அவகாசம் கொடுக்க வேண்டும்" என்று விளக்கமளித்தார்.
மேலும், "மூன்று வடிவங்களுக்கும் மூன்று வெவ்வேறு கேப்டன்களை வைத்திருப்பது... பயிற்சியாளருக்கும் மிகவும் கடினமானது," என்றும் அவர் குறிப்பிட்டார். இதன் மூலம், அனைத்து வடிவங்களுக்கும் ஒரே கேப்டனை உருவாக்கும் திட்டத்தில் பிசிசிஐ உறுதியாக இருப்பது தெளிவாகிறது. இந்த முடிவுக்குப் புதிய தலைமைப் பயிற்சியாளர் கௌதம் காம்பீரும் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே, டி20 உலகக் கோப்பையின் முடிவு எதுவாக இருந்தாலும், இந்திய அணியின் அடுத்த ஒரே இந்திய அணி கேப்டனாக சுப்மன் கில் உருவெடுப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்திய கிரிக்கெட்டின் அடுத்த பத்தாண்டுகளுக்கான ஒரு வலுவான முகமாக கில்லை உருவாக்கும் முயற்சியில் பிசிசிஐ தீவிரமாக இறங்கியுள்ளது.