கோவை: புச்சிபாபு தொடரில் டிஎன்சிஏ லெவன் அணிக்கு எதிரான போட்டியின் போது மும்பை அணி வீரர் சூர்யகுமார் யாதவின் செயல்பாடுகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடுவர் அவுட் கொடுக்காததால் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சூர்யகுமார் யாதவ், பின்னர் பேட்ஸ்மேனிடம் சென்று பந்து எங்கே அடித்து என்று கேள்வி எழுப்பிய விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் டிஎன்சிஏ லெவனுக்கு எதிரான போட்டியில் மும்பை அணி விளையாடி வந்தது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய டிஎன்சிஏ லெவன் அணி 379 ரன்களை குவித்தது. தமிழக வீரர்களான இந்திரஜித், பிரதோஷ் ரஞ்சன் பால் உள்ளிட்ட இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். பின்னர் களமிறங்கிய மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 156 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது.

தமிழக வீரர் சாய் கிஷோர் 36 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலமாக டிஎன்சிஏ லெவன் அணி 223 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கியது. தமிழக வீரர் லோகேஷ்வர் மற்றும் ஆதிஷ் இருவரும் 142 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதனால் ஒரு கட்டத்தில் மும்பை அணி வீரர்கள் பொறுமையை இழந்தனர்.
இதனிடையே மும்பை பவுலர் தனுஷ் கோட்டியான் வீசிய பந்து லோகேஷ்வர் பேடில் அடித்து சென்றது. அப்போது மும்பை வீரர்கள் நடுவரிடம் அவுட் என்று அப்பீல் செய்ய, நடுவர் அவுட் கொடுக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த சூர்யகுமார் யாதவ், உடனடியாக நடுவரிடம் நேரடியாக சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் நடுவரும் அவுட் அளிக்கப்படாததற்கான விளக்கத்தையும் சூர்யகுமார் யாதவிடம் கூறினார்.
அப்போது திருப்தியடையாத சூர்யகுமார் யாதப் மீண்டும் ஓவர் முடிவடைந்த பின், நடுவருடன் வாக்குவாதம் செய்தார். அதுமட்டுமல்லாமல் பேட்ஸ்மேனான லோகேஷ்வரிடம் நேரடியாக சென்று, உண்மையை சொல்லு.. பந்து எங்கே பட்டு சென்றது? என்று கேள்வி எழுப்பி மிரட்டும் தொனியில் பேசி இருக்கிறார். இந்த வீடியோ ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட் தொடரின் போது சிரித்த முகத்துடன் இருக்கும் சூர்யகுமார் யாதவ், யாரையும் ஸ்லெட்ஜிங் செய்யவே முயற்சிக்க மாட்டார். ஆனால் உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் இவ்வளவு வெளிப்படையாக சூர்யகுமார் யாதவ் கொந்தளித்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய டி20 அணியின் கேப்டனான பின்னரே சூர்யகுமார் யாதவின் நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய லோகேஷ்வர் 73 ரன்களை விளாசி அசத்தினார். இதன் காரணமாக 2வது இன்னிங்ஸில் டிஎன்சிஏ லெவன் அணி 286 ரன்கள் குவித்தது. இதனாம் மும்பை அணி வெற்றி பெறுவதற்கு 510 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
மேலும், 3வது நாளின் இரண்டாம் பாதி ஆட்டத்தின் போது சூர்யகுமார் யாதவ் ஃபீல்டிங் செய்யவில்லை. ஸ்லிப் திசையில் ஃபீல்டிங் செய்த போது கைகளில் காயம் ஏற்பட்டதால், ஓய்வறைக்கு சென்றார். அதன்பின் அவர் ஃபீல்டிங் செய்யவே வரவில்லை. தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய மும்பை அணி 3வது நாளில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் சேர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.