மும்பை: இந்திய அணியின் நட்சத்திர கேப்டனான சூரியகுமார் யாதவ் தற்போது ஆஸ்திரேலிய தொடரின் வெற்றிக்கு பின் சொந்த நாட்டில் தனது பொழுதை கழித்து வருகிறார். அடுத்ததாக சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வரும் செப்டம்பர் 9ஆம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்த போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று டி20 உலக கோப்பைக்கு தயாராகும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் மும்பை அணியில் தன்னை சேர்க்க வேண்டாம் என சூரியகுமார் யாதவ் ஒரு கோரிக்கை விடுத்திருக்கிறார்.

அதன்படி ரஞ்சி கிரிக்கெட் தொடரின் அடுத்த சுற்று போட்டிகள் வரும் நவம்பர் 16ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டிகள் முடிவடைந்த உடன் விஜய் ஹசாரே கோப்பை மற்றும் சையது முஸ்தாக் அலி தொடர் நடைபெற இருக்கிறது. டி20 உலக கோப்பைக்கு சூரியகுமார் யாதவ் கவனம் செலுத்துவதால் தம்மால் இனி டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாது என்பதை சூரியகுமார் மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் மும்பை அணிக்காக விஜய் ஹசாரே கோப்பை மற்றும் சையது முஸ்தாக் அலி தொடரில் கண்டிப்பாக விளையாடுவேன் என்றும் சூரியகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடங்குவதற்கு முன்பு விஜய் ஹசாரே கோப்பை போட்டிகள் நடைபெற இருக்கிறது. இதில் சூரிய குமார் யாதவும் இடம் பெறுவார் என தெரிகிறது.
ஒருநாள் அணியில் இருந்து சூரியகுமார் யாதவும் ஏற்கனவே ஓரங்கட்டப்பட்ட நிலையில் தற்போது டி20 அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த நேரத்தில் தம்மால் ரஞ்சி கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாது என்றும் அது டி20க்கு சரியாக இருக்காது என்பதால் இந்த முடிவை சூரியகுமார் யாதவும் எடுத்து இருக்கிறார்.
உலகக் கோப்பைக்கு முன்பு தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான தொடர்கள் மட்டுமே எஞ்சி இருக்கிறது. இதைத் தவிர சையது முஸ்தாக் அலி டி20 தொடர் இருக்கிறது. இதில் இந்திய வீரர்கள் விளையாடி பயிற்சி எடுத்தால் மட்டுமே டி20 உலக கோப்பைக்கு தயாராக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.