மும்பை: இந்திய டி20 அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸை விட சிறந்தவர் என முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார். 2026 டி20 உலகக் கோப்பையில் அமெரிக்காவுக்கு எதிராக, மும்பையின் வான்கடே மைதானத்தில் 49 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 84 ரன்கள் குவித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
இந்தியா பவர்பிளேயின் கடைசி ஓவரில் 45-2 ரன்களில் தள்ளாட, சூர்யகுமார் களமிறங்கினார். பின்னர், 13வது ஓவரில் அணி 77-6 என கடினமான சூழலில், அவர் தனி ஆளாக நின்று, அணியின் மொத்த ரன்களில் பாதிக்கும் மேல் குவித்து, இந்திய அணியின் மானத்தை காப்பாற்றினார்.

சூர்யகுமாரின் சிறப்பான இன்னிங்ஸ் இந்திய அணியின் வெற்றிக்குக் காரணமாகியது. 162 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் மோனாக் படேல் தலைமையிலான அமெரிக்க அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சூர்யகுமார் யாதவை உண்மையான 360 டிகிரி ஆட்டக்காரர் என மனோஜ் திவாரி பாராட்டினார்.
இது குறித்து பேசிய அவர், "சூர்யாவிடம் நாம் கண்ட ஷாட்கள் அபாரமானது. ஏ.பி. டி வில்லியர்ஸை 360 டிகிரி வீரர் என்கிறோம், ஆனால் எனக்கு இவர்தான் உண்மையான '360 டிகிரி' வீரர். ஏ.பி. டி வில்லியர்ஸ் slice செய்து Third man-க்கு மேலால் சிக்ஸ் அடிப்பதை நான் பார்த்ததில்லை, ஆனால் சூர்யா ஐபிஎல் போட்டியில் அதைச் செய்துள்ளார். அந்த ஷாட் தேர்வு எளிதல்ல, ஆனால் அவர் எவ்வளவு திறமையானவர் என்பதைத் தெளிவாகக் காட்டினார்," என்றார்.
2025 ஆம் ஆண்டுக்குப்பின் சூர்யகுமார் யாதவ் தன் ஆட்டத்திறனை மேம்படுத்தினார். நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 'தொடர் நாயகன்' விருது வென்று, 2026 உலகக் கோப்பை பயணத்தைத் தொடங்கினார். 2026 ஆம் ஆண்டின் ஆறு டி20 சர்வதேசப் போட்டிகளில், அவர் 108.66 சராசரியுடன் 326 ரன்கள் குவித்துள்ளார்.
சௌரப் நெத்ராவல்கர் வீசிய கடைசி ஓவரில் சூர்யகுமார் 21 ரன்கள் விளாசி, அணிக்கு நம்பிக்கையை அளித்தார். இந்த இன்னிங்ஸ் குறித்து பேசிய முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் முரளி கார்த்திக் "இந்தியா 161 ரன்கள் எடுத்ததற்கு ஒரே காரணம் சூர்யகுமார் யாதவ் தான். கடந்த ஆண்டு மோசமான ஃபார்மில் இருந்தும், அணி அவர் மீது நம்பிக்கை வைத்தது. திறமை நிரந்தரமானது. ஒரு கட்டத்தில் 140-150 கூட சாத்தியமில்லை என்று எனக்கு தோன்றியது," என்றார். இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில், நமீபியாவை பிப்ரவரி 12, வியாழக்கிழமை அன்று, டெல்லியில் எதிர்கொள்ளவுள்ளது.