மும்பை: இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற வேண்டி உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வந்த சூர்யகுமார் யாதவ் அடுத்து நடக்க உள்ள துலீப் டிராபி தொடரின் முதல் போட்டியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறார். அவர் இதற்கு முன் புச்சி பாபு டெஸ்ட் தொடரில் ஆடினார்.
அந்த தொடரின் தமிழக அணியான டிஎன்சிஏ 11 அணிக்கு எதிரான போட்டியின் போது சூர்யகுமார் யாதவ் கையில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் அடுத்து நடக்க உள்ள துலீப் டிராபி தொடரில் அவர் பங்கேற்பாரா? என்ற சந்தேகம் இருந்தது. தற்போது பிசிசிஐ அவரை துலீப் டிராபி தொடரிம் முதல் போட்டியில் இருந்து நீக்கி உள்ளது.

மேலும், அவர் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அனுப்பப்பட்டு இருக்கிறார். இந்திய அணி அடுத்து வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதை தொடர்ந்து நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது. இந்த நிலையில், தான் மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் பெற்று வரிசையாக டெஸ்ட் போட்டிகளில் ஆட வேண்டும் என்ற நோக்கத்துடன் உள்ளூர் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்க துவங்கினார் சூர்யகுமார் யாதவ்.
வங்கதேச டெஸ்ட் தொடருக்கு முன் இந்திய அணிக்கான வீரர்களை தேர்வு செய்யும் வகையில் துலீப் டிராபி தொடரை பிசிசிஐ திட்டமிட்டு இருந்தது. இந்தத் தொடரின் முதல் போட்டியின் முடிவில் வங்கதேச டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளது. எனவே, இந்தத் தொடரின் முதல் போட்டியில் சிறப்பாக ஆட வேண்டும் என அனைத்து வீரர்களும் திட்டமிட்டு உள்ளனர். சூர்யகுமார் யாதவும் அதே மனநிலையில் தான் இருந்தார். அதற்காக தன்னை தயார் செய்யும் வகையிலேயே புச்சி பாபு தொடரில் மும்பை அணிக்காக அவர் விளையாடினார்.
அந்தத் தொடரில் சிறப்பாக ஆடி அதன் பின் துலீப் டிராபியிலும் சிறப்பாக ஆடினால் தனக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும் என அவர் திட்டமிட்டார். ஆனால், புச்சி பாபு தொடரில் அவரால் அதிக ரன்களை குவிக்க முடியவில்லை. மேலும், டிஎன்சிஏ 11 அணிக்கு எதிரான போட்டியில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. அதனால், அவர் அந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய வரவில்லை. தற்போது அவர் அந்த காயம் காரணமாக துலீப் டிராப தொடரின் முதல் போட்டியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.
அதனால், அவர் வங்கதேச டெஸ்ட் தொடருக்கு தேர்வாகும் வாய்ப்பையும் இழந்து விட்டதாகவே கருதப்படுகிறது. சூர்யகுமார் யாதவ் 2023 ஆம் ஆண்டு ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி இருந்தார். அதன் பின் அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. மேலும், அவர் ஓர் ஆண்டாக உள்ளூர் டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவில்லை.
ஓராண்டுக்கு பின் புச்சி பாபு தொடரில் இருந்து டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கத் துவங்கினார். துரதிஷ்டவசமாக இரண்டு போட்டிகளுடன் காயத்தால் விளையாட முடியாத நிலைக்கு சென்று இருக்கிறார் சூர்யகுமார். மேலும் துலீப் டிராபி தொடரின் முதல் போட்டியிலும் அவர் ஆடப்போவதில்லை என்பதால் தேர்வு குழுவினர் அவரை வங்கதேச டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்ய 100 சதவீதம் வாய்ப்பு இல்லை. சூர்யகுமார் யாதவின் டெஸ்ட் அணி கனவு முடிவுக்கு வந்துள்ளது. தற்போது 33 வயதாகும் நிலையில் இந்த வாய்ப்பை தவறவிட்டால் அவரால் இனி இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.