
திடீர் தடுமாற்றம்
முதல் போட்டியில் ஓரளவிற்கு அதிரடியாக இருந்த சூழலில் 2வது போட்டியில் ரசிகர்கள் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு மிக கடினமான பிட்ச்சாக இருந்தது. அதிக ஸ்பின் இருந்ததால் பேட்ஸ்மேனால் பந்தை கணிக்கவே முடியவில்லை. குறிப்பாக 2வது இன்னிங்ஸில் படு மோசமாக இருந்தது. சுப்மன் கில் (11), இஷான் கிஷான் (19), ராகுல் திரிபாதி (13), வாஷிங்டன் சுந்தர் (10) என அடுத்தடுத்து வெளியேறினர்.

கேப்டன் இன்னிங்ஸ்
70 /4 என இந்திய அணி தடுமாறிய போது தான் துணைக்கேப்டன் சூர்யகுமார் - கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி காப்பாற்றினர். எப்போதுமே அதிரடியாக ஆடும் சூர்யகுமார் யாதவ் மிகவும் நிதானமாக விளையாடினார். கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவை என வந்த போதும், அவர் நிதானமாக 5வது பந்தில் தூக்கி அடித்து வெற்றி பெற வைத்தார்.

சூர்யகுமார் விளக்கம்
இந்நிலையில் இதுகுறித்து சூர்யகுமார் யாதவ் பேசியுள்ளார். அதில், புதுவிதமான சூர்யகுமாரை இன்று பார்த்திருப்பீர்கள். சூழலுக்கு ஏற்றார் போல நடப்பது முக்கியமாகும். வாஷிங்டனின் விக்கெட் வீழ்ந்ததும், கடைசி வரை அங்கு களத்தில் இருக்க வேண்டும் என நினைத்தேன். இது ஒரு சவாலான விக்கெட். கடைசி ஓவரில் ஒரே ஒரு அதிரடி ஷாட் தேவைப்பட்டது. அப்போது பதற்றத்தை அடக்குவது கடினமாகும்.

பாண்ட்யாவின் வார்த்தைகள்
5வது பந்தின் போது ஹர்திக் பாண்ட்யா என்னிடம் நேராக வந்த இந்த பந்தில் நீ ஆட்டத்தை முடிக்க வேண்டும் எனக்கூறினார். அவரின் அந்த வார்த்தைகள் எனக்கு நம்பிக்கை கொடுத்தது. அதன் விளைவாகவே தைரியமாக தூக்கி அடித்து வெற்றி பெற்றோம். 2வது இன்னிங்ஸில் பிட்ச்- இப்படி மாறும் என எதிர்பார்க்கவே இல்லை. எனினும் அதற்கேற்றார் போல ஆடிவிட்டோம் என சூர்யகுமார் கூறினார்.


Click it and Unblock the Notifications