மும்பை: இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் சூர்யகுமார் யாதவ், சமீபத்தில் டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்து வரலாற்றுச் சாதனை படைத்தார். 2024 ஆம் ஆண்டு கேப்டனாகப் பொறுப்பேற்றதில் இருந்து, அவரது தலைமையிலான இந்திய அணி சர்வதேச டி20 போட்டிகளில் 80 சதவீத வெற்றியைப் பதிவு செய்து மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது. அவர் தலைமையில் இந்திய அணி இதுவரை விளையாடிய 52 போட்டிகளில் 42 போட்டிகளில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இது குறித்துப் பேசிய சூர்யகுமார் யாதவ், தனது பள்ளிப் பருவ மதிப்பெண்களுடன் இதனை ஒப்பிட்டு மிகவும் நகைச்சுவையாகப் பதிலளித்துள்ளார். "பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும்போது நான் எடுக்க நினைத்த 80 சதவீத மதிப்பெண்களை, இன்று கிரிக்கெட்டில் கேப்டனாகப் பெற்றுள்ளேன். பள்ளியில் படிக்கும் காலத்தில் நான் 50 அல்லது 60 சதவீத மதிப்பெண்களைத் தாண்டியதே கிடையாது.

ஆனால், இப்போது கிரிக்கெட்டில் 80 சதவீத வெற்றியைப் பெற்றுள்ளேன் என்பதைக் கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பொதுவாக நான் தனிப்பட்ட புள்ளிவிவரங்களில் அதிக கவனம் செலுத்துவதில்லை. ஆனாலும், எந்த ஒரு போட்டியிலும் தோற்பது யாருக்கும் பிடிக்காது, எனக்கும் எல்லா போட்டிகளிலும் வெற்றி பெறுவதுதான் மிகவும் பிடிக்கும்" என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.
சூர்யகுமார் யாதவின் தந்தை அசோக் குமார் யாதவ், பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் ஒரு மின் பொறியாளராகப் பணியாற்றியவர். படிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குடும்பப் பின்னணியில் இருந்து வந்த சூர்யகுமாருக்கு விளையாட்டில் மட்டுமே அதிக ஆர்வம் இருந்துள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், "எனது குடும்பத்தினர் முதலில் என்னை நன்றாகப் படிக்க வைக்கவே முயற்சி செய்தனர். ஆனால், படிப்பில் எனக்குத் துளியும் ஆர்வம் இல்லை என்பதை அவர்கள் வெகுவிரைவிலேயே புரிந்துகொண்டனர்.

இந்தப் பையன் நம் கைக்கு அடங்க மாட்டான் என நினைத்து, விளையாட்டில் எனக்கு இருந்த ஆர்வத்தைப் பார்த்து முழுமையாக ஆதரவு அளித்தனர். நீ போய் விளையாடு, ஒருவேளை எதுவும் சரியாக வரவில்லை என்றால் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று எனக்கு முழுமையான தைரியம் கொடுத்தனர்" எனத் தனது கடந்த கால நினைவுகளை சூர்யகுமார் யாதவ் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார். தனது குடும்பத்தினர் கொடுத்த அந்தத் தைரியமே, இன்று அவரை ஒரு சிறந்த கேப்டனாக உயர்த்தியுள்ளது.
