கொழும்பு: வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் வெறும் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறி இருப்பது ரசிகர்களிடையே அதிக விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஐசிசி உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். இவரை இந்திய அணியில் சேர்ப்பதற்காக சஞ்சு சாம்சன், ரவிச்சந்திரன் அஸ்வின், சாஹல் உள்ளிட்டோரை இந்திய அணி நிர்வாகம் புறக்கணித்துள்ளது. இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் 24 இன்னிங்ஸ்களில் வெறும் 511 ரன்களை 24.33 பேட்டிங் சராசரியுடன் சேர்த்திருக்கிறார் சூர்யகுமார் யாதவ்.

உலகக்கோப்பை தொடருக்கான பிளேயிங் லெவனில் சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட வாய்ப்பில்லை என்றாலும், எந்த பேட்ஸ்மேன் காயமடைந்தாலும் அவருக்கான மாற்று வீரராக சூர்யகுமார் யாதவ் களமிறங்கவே அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆனால் சூர்யகுமார் யாதவை ஃபினிஷர் ரோலில் களமிறக்கி பயன்படுத்துவோம் என்று புதிய விளக்கத்தை கூறி கேப்டன் ரோகித் சர்மா பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.
இந்த நிலையில் ஆசியக் கோப்பை தொடரில் கேஎல் ராகுல், இஷான் கிஷன் ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பில் சிறப்பாக செயல்பட்டு தங்களின் திறமையை நிரூபித்தனர். இந்த நிலையில் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்று வரும் போட்டியில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு சூர்யகுமார் யாதவ் களமிறக்கப்பட்டார்.
ரோகித் சர்மா கூறியதை போலவே சூர்யகுமார் யாதவ் 6வது பேட்ஸ்மேனாக களமிறங்கினார். இந்திய அணி 94 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், சூர்யகுமார் யாதவ் அழுத்தத்தை எதிரணிக்கு திருப்புவார் என்று பார்க்கப்பட்டது. ஆனால் சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் சூர்யகுமார் யாதவ் நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். ஒரு கட்டத்தைல் ஸ்வீப் ஷாட் அடிக்க முடியாமல் சூர்யகுமார் யாதவ் திணறினார்.
இதனையறிந்த ஷகிப் அல் ஹசன், சூர்யகுமார் யாதவ் ஸ்வீப் ஷாட் அடிப்பதற்கான லெந்தி வீசி பந்தை டர்ன் செய்ய, பந்து சரியாக ஸ்டம்பில் பட்டு சென்றது. இதனால் சூர்யகுமார் யாதவ் 34 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவின் ஒருநாள் பேட்டிங் சராசரி 24.41 ஆக உள்ள நிலையில், கூடுதலாக 2 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்துள்ளார். இதனால் ஒருநாள் கிரிக்கெட் புரிந்து கொள்ளாத சூர்யகுமார் யாதவை உலகக்கோப்பைக்கு அழைத்து செல்வது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.