
சூர்யகுமார் யாதவ்
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி லீட்ஸில் உள்ள ஹெட்டிங்லேவில் நாளை மறுதினம் (ஆக.25)ம் தேதி தொடங்குகிறது. இப்போட்டிக்கான இந்திய அணி தேர்வில் தான் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதாவது, தொடர்ந்து சொதப்பி வரும் புஜாராவுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவுக்கு அணியில் இடம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. போட்டி தொடங்க, இன்னும் ஒரு நாளே மீதமுள்ள நிலையில், எக்ஸ்பெர்ட்ஸ் பலரும், தங்கள் மாதிரி பிளேயிங் லெவன் அணியில், புஜாராவுக்கு பதிலாக சூர்ய குமார் யாதவை அணியில் சேர்த்துள்ளனர்.

தீவிர ரசிகன்
புஜாரா கடந்த நான்கு இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தம் 70 ரன்களே அடித்திருக்கிறார். ஆவரேஜ் 23.33 மட்டுமே. இந்நிலையில், Sports Tak-க்கு அளித்துள்ள பேட்டியில், முன்னாள் இந்திய வீரர் ஃபரூக் என்ஜினியர் கூறுகையில், "முதலில், நான் சூர்யகுமார் யாதவின் தீவிர ரசிகன். அவர் ஒரு தரமான வீரர் என்று நினைக்கிறேன். இந்திய அணியின் பிளேயிங் லெவனில், நான் நிச்சயமாக அவரை புஜாரா அல்லது ரஹானேவுக்கு பதிலாக சேர்க்க விரும்புவேன். புஜாரா, ரஹானே இருவரும் கிளாஸ் வீரர்கள், மிகச் சிறந்த வீரர்கள். ஆனால் சூர்யகுமார் யாதவ் ஒரு மேட்ச் வின்னர்.

அற்புதமான மனிதர்
சூர்யா ரொம்பவே பாஸிட்டிவான ஒரு வீரர். இந்தியாவிற்காக அவர் நிச்சயம் சிறப்பாக விளையாட முடியும். சூர்யகுமார் நிச்சயமாக அணியில் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர் ஒரு ஆக்ரோஷமான வீரர்; அவர் உங்களுக்கு விரைவாக சதம் அடித்துக் கொடுப்பார் அல்லது விரைவாக 70-80 ரன்களை குவித்துவிடுவார். அவர் ஒரு அற்புதமான பேட்ஸ்மேன், அற்புதமான ஃபீல்டர் மற்றும் ஒரு அற்புதமான மனிதர்" என்று புகழ்ந்து தள்ளியுள்ளார் ஃபரூக் என்ஜினியர்.

டாப் ஃபார்ம்
சூர்யகுமார் யாதவ் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஃபார்மின் உச்சத்தில் இருக்கிறார்.
அவர் ஒருநாள் போட்டிகளில் 62.00 சராசரியுடன் 124 ரன்களும், டி20 களில் மூன்று இன்னிங்சில் 139 ரன்களும் 46.33 சராசரியில் வைத்துள்ளார். ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட் அனைத்து வடிவங்களிலும், அவர் 100க்கு மேல் ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.
முதல்தர கிரிக்கெட்டில், மும்பை பேட்ஸ்மேன் சூரயகுமார் 77 போட்டிகளில் 14 சதங்கள் மற்றும் 26 அரைசதங்கள் உட்பட 44.01 சராசரியைக் கொண்டுள்ளார்.
கடந்த ரஞ்சி கோப்பையில் சூர்யகுமார் 10 இன்னிங்சில் 56.44 சராசரியுடன் 508 ரன்களை குவித்தார். இதில், இரண்டு சதங்கள் மற்றும் பல அரைசதங்கள் அடங்கும்.

இன்னுமொரு வாய்ப்பு
முன்னதாக, முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் பட், புஜாராவுக்கு பதிலாக சூர்யகுமாரை அணியில் சேர்க்க பரிந்துரைத்தார். தனது யூடியூப் சேனலில் பேசிய பட், இதுபோன்ற மோசமான சூழ்நிலைகளில் மூத்த பேட்ஸ்மேன் நம்பகமானவராக இருந்தாலும் புஜாராவை விட சூர்யகுமாருக்கு ஒரு வாய்ப்பு வழங்கலாம் என்றார். இதுகுறித்து அவர், "புஜாரா போராடுகிறார். நிலைமைகளும் கடினமானவை. இந்தியா விரும்பினால், அவர்கள் சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு அளிக்கலாம். இது அனைத்தும் விராட் கோலி என்ன நினைக்கிறார், பயிற்சியாளர் என்ன நினைக்கிறார் என்பதைப் பொறுத்தது. இதுபோன்ற சோதனை நிலைகளில் ஒரு இளம் வீரரை விரைவில் அழைத்து வருவது நல்லது என்று நான் உணர்கிறேன். இது அவருக்கு மிகவும் கடினமான பணியாக இருக்கும். மறுபுறம், புஜாரா நம்பகமானவர் மற்றும் இதுபோன்ற மோசமான நிலைமைகளில் அவர் முன்பு சாதித்து காட்டியுள்ளார். அந்த வகையில் அவருக்கு இன்னும் ஒரு டெஸ்ட் போட்டிக்கான வாய்ப்பு கொடுக்கலாம்" என்று சல்மான் பட் கூறியுள்ளார்.

ஓவர்கள்
சல்மான் பட் சொல்வதும் ஒருவகையில் சரிதான். புஜாராவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு நிச்சயம் கொடுக்கப்பட வேண்டும். ஏனெனில், லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் அவர் தனது அபாரமான போராட்டத்தை வெளிப்படுத்தினர். களத்தில் நீண்ட நேரம் இன்று இங்கிலாந்து பவுலர்களை சோதித்தார். இந்தியா சிக்கலான சூழலில் இருந்த போது, நான்காவது விக்கெட்டுக்கு புஜாரா - ரஹானே கூட்டணி இணைந்தது. ஏற்கனவே, இருவரும் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் ஏகத்துக்கும் சொதப்பி வந்தனர். இந்தியாவின் மிடில் ஆர்டரே சீர் குலைந்து போயிருந்தது. இதனால், இருவரின் தலைக்கு மேலே எந்நேரமும் கீழே விழும்படியான கத்தி தொங்கிக் கொண்டிருந்தது. இப்படியொரு இக்கட்டான நிலையில் தான் புஜாரா - ரஹானே பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்தியாவின் 2ம் இன்னிங்ஸில் 23.2வது பந்தில் இந்த ஜோடி இணைந்தது. பிரிந்தது எத்தனையாவது ஓவரில் தெரியுமா? 72.4வது ஓவரில். கிட்டத்தட்ட 50 ஓவர்கள் இருவரும் நிலைத்து நின்றார்கள். அதாவது, ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு அணி சந்திக்கு ஒட்டுமொத்த ஓவர்கள் இது. 206 பந்துகளை சந்தித்த புஜாரா 45 ரன்களும், 146 பந்துகளை சந்தித்த ரஹானே 61 ரன்களும் எடுத்தனர். இருவரும் சேர்ந்து கிட்டத்தட்ட 4 மணி நேரத்துக்கும் அதிகமாக விளையாடினர். அவர்களால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியவில்லை என்றாலும், நான்காவது நாளில் இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்பை தள்ளிப்போட்டனர்.

அதகள வெற்றி
பிறகு கடைசி நாளில் முகமது ஷமி - பும்ரா ஜோடி நம்ப முடியாத வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது தனிக்கதை. 9வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 89 ரன்கள் குவித்து புது சாதனை படைத்தது. முகமது ஷமி 56 ரன்களும், பும்ரா 34 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷமி மற்றும் பும்ராவின் அதிகபட்ச ஸ்கோர் இதுவேயாகும். ரிஷப் பண்ட் அவுட்டான உடனேயே, இந்தியாவின் கதை முடிந்தது என்றே அனைவரும் கருதினர். ஆனால், 9வது விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்து, இந்திய அணி இரண்டாம் இன்னிங்ஸில் 298 ரன்கள் குவிக்க இருவரும் காரணமாக அமைந்தனர். அந்த பிறகு களமிறங்கிய இங்கிலாந்து, 120 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 151 ரன்கள் வித்தியாசத்தில் அதகளமான வெற்றியை பதிவு செய்து, தொடரில் 1 - 0 முன்னிலை பெற்றதை வரலாறு அறியும்.


Click it and Unblock the Notifications











