இந்திய அணி கேப்டன் பதவியை காப்பாற்ற சூர்யகுமார் செய்த செயல்.. இந்த குறுக்கு வழி தேவையா?
மும்பை: இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், தனது மோசமான பேட்டிங் ஃபார்ம் மற்றும் உடற்தகுதி காரணமாகக் கேப்டன் பதவியை இழக்கும் அபாயத்தில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், தனது பதவியையும் அணியில் இருக்கும் இடத்தையும் காப்பாற்றிக் கொள்ள அவர் மைதானத்திற்கு வெளியே ஒரு பெரிய அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
அண்மையில் முடிவடைந்த 2026 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்திய சூர்யகுமார் யாதவ், பேட்டிங்கில் பெரும் சரிவைச் சந்தித்தார். 14 போட்டிகளில் விளையாடிய அவர் வெறும் 210 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமாகச் சொதப்பினார். காயம் காரணமாகச் சில போட்டிகளில் அவர் விளையாடாததும் அவரது உடற்தகுதி குறித்த சந்தேகங்களை எழுப்பியது. இதனால், அவர் தொடர்ந்து டி20 அணியின் கேப்டனாக நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

'பிஆர்' மேலாளர் நியமனம்
இதுபற்றி கிரிக்பிளாகர் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், சூர்யகுமார் யாதவ் தனது கேப்டன் பதவியைத் தக்கவைக்கத் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் ஒரு தனிப்பட்ட பிஆர் மேலாளரை நியமித்துள்ளார். தனது உடற்தகுதி மற்றும் ஃபார்ம் குறித்துப் பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் நேர்மறையான கருத்துக்களைக் கொண்டு சேர்க்கவும், தவறான செய்திகள் பரவாமல் தடுக்கவும் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். மேலும், பிசிசிஐ அதிகாரிகள், தேர்வாளர்கள் மற்றும் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோருடன் அவர் தொடர்ந்து தொடர்பு கொண்டு பேசி வருகிறார் என கூறப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணியின் 30 பேர் கொண்ட உத்தேசப் பட்டியலில் சூர்யகுமார் யாதவின் பெயர் இடம்பெறவில்லை. இது அணி நிர்வாகம் அவரைத் தாண்டி அடுத்த கேப்டனைத் தேடத் தொடங்கிவிட்டது என்பதற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், கம்பீர் அவருக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாகவும், அவரை அணியிலிருந்து நீக்க முழுமையாக உடன்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
அடுத்த கேப்டன் யார்?
சூர்யகுமார் யாதவின் கேப்டன்சி குறித்து பிசிசிஐ தேர்வுக்குழுவில் இரண்டு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. ஒரு தரப்பினர் அவருக்கு இன்னும் சில காலம் அவகாசம் அளிக்க வேண்டும் என்று கூறினாலும், மற்றொரு தரப்பினர் உடனடியாகப் புதிய கேப்டனை நியமிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
சூர்யகுமாருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் அல்லது இஷான் கிஷன் ஆகியோரை அடுத்த கேப்டனாக நியமிக்கப் பரிசீலனைகள் நடந்து வருகின்றன. மேலும், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரஜத் படிதார் ஆகியோரது பெயர்களும் இந்த விவாதத்தில் உள்ளன. தனது கேப்டன் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள மைதானத்திற்கு வெளியே சூர்யகுமார் யாதவ் எடுத்துள்ள இந்த வியூகம், இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற குறுக்கு வழிகள் தேவையா? என ரசிகர்கள் சிலர் விமர்சித்தும் வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
