மும்பை: இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஒருநாள் கிரிக்கெட் வடிவம் தனக்கு ஒருபோதும் புரிந்ததில்லை என்றும், அதை மிக சவாலானது என்றும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். 50 ஓவர் ஆட்டத்தில் தேவைப்படும் பேட்டிங் பாணியே தனது சிரமத்திற்குக் காரணம் என்று அவர் கூறினார்.
2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியே அவருக்கு கடைசி ஒருநாள் போட்டியாகும். அதில் 28 பந்துகளில் 18 ரன்கள் பங்களிப்புச் செய்திருந்தாலும், 34 ஒருநாள் இன்னிங்ஸ்களில் அவரது சராசரி 26 மட்டுமே என்பதால், உலகக் கோப்பைக்கான அவரது தேர்வு அப்போதே விமர்சனங்களைச் சந்தித்தது.

இது குறித்து பேசிய சூர்யகுமார், "ஒருநாள் கிரிக்கெட்டை நான் எவ்வளவு அருகில் இருந்து அனுபவித்து, கவனித்தாலும், அது மூன்று வெவ்வேறு பாணிகளில் பேட் செய்ய வேண்டிய ஒரு வடிவம் என்று நான் உணர்கிறேன். சில சமயங்களில், சீக்கிரம் களமிறங்கினால், விக்கெட்டுகள் வேகமாக வீழ்ந்தால், டெஸ்ட் கிரிக்கெட் போல பேட் செய்ய வேண்டும்.

பின்னர், ஒருநாள் போட்டிக்கு ஏற்ற சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டுடன் பேட் செய்ய வேண்டும், இறுதியாக, இன்னிங்ஸின் முடிவில் டி20 வடிவம் போல் விளையாட வேண்டும். எனவே, அது எனக்கு ஒருபோதும் புரியாத ஒரு வடிவம். அதை சிறப்பாகச் செய்ய முயற்சி செய்தேன், ஆனால் அது சவாலான வடிவம்," என்றார்.டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இதே நிலைதான். 2023 பார்டர்-கவாஸ்கர் டிராபியில் ஒரு போட்டிக்குப் பின் நீக்கப்பட்டார். டி20 கிரிக்கெட் தன்னுடைய சிறந்த வடிவமாக மாறியதற்கு விதி தான் காரணம் என்று சூர்யகுமார் கூறினார்.
தனது பயணம் குறித்து பேசிய அவர், "உங்கள் வாழ்க்கையில் என்ன எழுதப்பட்டுள்ளதோ, அதுதான் உங்களுக்குக் கிடைக்கும். நான் டெஸ்ட் கிரிக்கெட்டில்தான் ஆரம்பித்தேன், 10-12 ஆண்டுகள் ரஞ்சி டிராபியில் விளையாடினேன். மும்பையில் நீங்கள் வளர்ந்தால், சிவப்புப் பந்துடன் தான் தொடங்குவீர்கள், எனவே எல்லாம் சிவப்புப் பந்து சார்ந்ததாகவே இருக்கும். ஆனால் படிப்படியாக வெள்ளைப் பந்து கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தபோது, ஆர்வம் அதன்பக்கம் கொஞ்சம் மாறியது.

அதன்பிறகு டி20 ஃபார்மாட்டுக்கு வந்தேன். ஒருநாள் கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாட நிறைய முயற்சி செய்தேன், ஆனால் அங்கே எதுவும் கைகூடவில்லை," என்றார். இறுதியாக, "டி20-யில் எனக்கு நன்றாகச் செட் ஆகிவிட்டது, அப்படிச் சொல்லலாம்" என்று சூர்யகுமார் கூறினார்.