பெர்த்: விராட் கோலியுடன் பார்ட்னர்ஷிப் அமைப்பது குறித்து இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முதல் 2 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றிகளை கண்டுள்ளது. பேட்டிங் மற்றும் பவுலிங் அசுர பலத்தில் இருப்பதால் வெற்றிகள் குவிகின்றன.
இதன் மூலம் சூப்பர் 12 சுற்றுக்கான புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 4 புள்ளிகளுடன் முதலிடத்தை வகித்து வருகிறது. இன்னும் ஒரு வெற்றி பெற்றால் கூட அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிடும்.
இந்திய அணி எப்படிபட்ட சிக்கலில் இருக்கும் போதும், முதுகெலும்பாக இருந்து காப்பாற்றி செல்வது விராட் கோலி - சூர்யகுமார் யாதவ் ஜோடி தான். சமீபத்தில் போட்டிகளில் இவர்களின் பார்ட்னர்ஷிப்பை யாராலும் பிரிக்க முடியாமல் உள்ளது. விராட் கோலியே, சூர்யகுமார் யாதவின் ஆட்டத்தை பார்த்து தன்னம்பிக்கை வருவதாக புகழ்ந்து தள்ளியிருந்தார்.

இந்நிலையில் இந்த பார்ட்னர்ஷிப் குறித்து சூர்யகுமார் யாதவ் பேசியுள்ளார். அதில், என்னுடைய திட்டம் மிகவும் சுலபமான ஒன்று தான். அணியின் ஸ்கோரை மலமலவென உயர்த்த வேண்டும் என்பது தான் என்னுடைய பணி. அதன்படி விராட் கோலியிடம் நான் ஒரு விஷயத்தை கூறிவிடுவேன். அதாவது எடுத்தவுடனேயே சில பவுண்டரிகளை நான் விளாசினால், நான் தொடர்ந்து அதிரடியை காட்டுவேன். அப்போது விராட் நிதானமாக பார்ட்னர்ஷிப் கொடுப்பார்.
ஒருவேளை பிட்ச்-ல் அதிகப்படியான வேகம் இருந்தால், நிதானமாக பார்ட்னர்ஷிப் அமைக்க தான் முயற்சிப்போம். ஒருமுறை நான் அதிரடி காட்ட தொடங்கிவிட்டால், அவுட்டானால் சரி என தொடர்ந்து பவுண்டரிக்கு முயற்சிப்பேன். எக்காரணத்தை கொண்டும் பின் வாங்க மாட்டேன் என சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார்.