“உலகக் கோப்பையை வென்ற இந்திய கேப்டனை நீக்க மாட்டார்கள். சூர்யகுமாருக்கு.. ” - எம்.எஸ்.கே.பிரசாத்
மும்பை: இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியிலிருந்தும் அணியிலிருந்தும் சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டதை முன்னாள் தலைமைத் தேர்வாளர் எம்.எஸ்.கே.பிரசாத் மறுத்துள்ளார். அவர் நீக்கப்படவில்லை என்றும், பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா போல அவருக்கும் ஓய்வு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இவரது வாதம் ரசிகர்களிடையே விவாதத்தை கிளப்பி உள்ளது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி தனது 3 வது டி20 உலகக் கோப்பையை வென்றது. இந்நிலையில், அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய டி20 அணியில் அவர் சேர்க்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து எம்.எஸ்.கே.பிரசாத் கூறுகையில், "உலகக் கோப்பையை வென்று கொடுத்த கேப்டனை அடுத்த சர்வதேச தொடரிலேயே யாரும் அணியிலிருந்து அதிரடியாக நீக்க மாட்டார்கள். சூர்யகுமார் அணியிலிருந்து நீக்கப்பட முடியாத அளவுக்கு மிகச் சிறந்த வீரர். ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வளிக்கப்பட்டதைப் போல, சூர்யகுமாருக்கும் ஓய்வு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது" என்றார்.
முரண்படும் தகவல்கள்
சமீபத்தில் முடிவடைந்த 2026 ஐபிஎல் தொடரில் மும்பை அணி 9 வது இடத்தைப் பிடித்தது. சூர்யகுமார், பும்ரா மற்றும் பாண்டியா ஆகியோர் நீண்ட காலமாக தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு ஓய்வளித்தது சிறந்த முடிவு என பிரசாத் கூறினார். இவர்கள் விரைவில் அணிக்குத் திரும்புவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆனால், அதே மும்பை அணியைச் சேர்ந்த திலக் வர்மா அணியில் தக்கவைக்கப்பட்டு துணை கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், அடுத்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டே ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வளிப்பட்டுள்ளதாகத் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் தெளிவுபடுத்தியிருந்தார். பும்ராவும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் எம்.எஸ்.கே.பிரசாத்தின் கருத்து முரண்படுவது தெரிகிறது.
ரஜத் படிதார் புறக்கணிப்பு ஏன்?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் அணியில் சேர்க்கப்படாதது குறித்தும் எம்.எஸ்.கே.பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார். "பெங்களூரு அணிக்கு தொடர்ந்து 2 முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த ரஜத் படிதாரை தற்போது தேர்வு செய்யாவிட்டால் வேறு எப்போது தேர்வு செய்வீர்கள்? அவர் மிகச் சிறந்த ஃபார்மில் அதிக நம்பிக்கையுடன் உள்ளார். பல போட்டிகளில் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்துள்ளார். அவருக்கு அணியில் வாய்ப்பளிக்க இதுவே சரியான நேரம். அடுத்து வரும் பெரிய, கடினமான தொடர்களில் அவருக்கு வாய்ப்பளிக்கத் தேர்வுக்குழுவினர் திட்டமிட்டிருக்கலாம் என நம்புகிறேன்" என்று பிரசாத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
