இந்தூர்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் பவுண்டரிகளில் மட்டும் 60 ரன்கள் விளாசியுள்ள சம்பவம் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஹாட்ரிக் டக் டவுட்டாகி மோசமான சாதனையை படைத்தார் சூர்யகுமார் யாதவ். அதன்பின் சூர்யகுமார் யாதவால் ஒருநாள் கிரிக்கெட் நல்ல இன்னிங்ஸை விளையாட முடியவில்லை. டி20 கிரிக்கெட்டில் நம்பர் 1 வீரராக இருந்தும் ஒருநாள் கிரிக்கெட் கைகூடாது அவர் மீதான விமர்சனங்களுக்கு வழிவகுத்தது.

அதுமட்டுமல்லாமல் 19 மாதங்களாக சூர்யகுமார் யாதவால் ஒரு அரைசதம் கூட ஒருநாள் கிரிக்கெட்டில் அடிக்க முடியவில்லை. இதனால் ஃபார்மின்றி தவித்த சூர்யகுமார் யாதவை எப்படி உலகக்கோப்பை தொடருக்கு தேர்வு செய்யலாம் என்று விமர்சனங்கள் அனைத்து திசைகளிலும் இருந்து பறந்து வந்தன. ஆனால் சூர்யகுமார் யாதவை ஃபினிஷிங் ரோலில் தான் பயன்படுத்தப் போவதாக கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணி திட்டத்தை கூறினார்.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சூர்யகுமார் யாதவ் 6வது வீரராக வந்து 47 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இருப்பினும் தொடர்ச்சியாக சூர்யகுமார் யாதவால் இதனை செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் இந்தூரில் நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் வேற லெவல் ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் சூர்யகுமார் யாதவ்.
இந்தப் போட்டியில் களமிறங்கி சந்தித்த இரண்டாவது ஓவரிலேயே கேமரூன் க்ரீன் வீசிய ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்சர்களை விளாசி தள்ளினார். அதன்பின் ஒவ்வொரு ஓவருக்கும் சூர்யகுமார் யாதவ் பவுண்டரிகளை விளாசி தள்ளினார். கேமரூன் க்ரீனுக்கு பின் அப்பாட் வீசிய ஓவரில் ஒரு சிக்ஸ், இரு பவுண்டரிகளை விளாசினார். இதன் மூலமாக 24 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.
எந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஹாட்ரிக் டக் அவுட்டானாரோ, அதே அணிக்கு எதிராக அடுத்தடுத்து அரைசதங்களை விளாசி இருக்கிறார். சிறப்பாக ஆடிய அவர் 37 பந்துகளில் 72 ரன்கள் குவித்துள்ளார். அதில் 6 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களும் அடங்கும். அதேபோல் பவுண்டரி மற்றும் சிக்சர்களில் மட்டும் 60 ரன்களை சூர்யகுமார் யாதவ் விளாசி இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.