குயானா: இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் அதிக முறை ஆட்டநாயகன் விருது பெற்றவர்கள் பட்டியலில் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி களமிறங்கியது. இந்தப் போட்டியில் தோல்வியடைந்தால் இந்திய அணி 17 ஆண்டுகளுக்கு பின் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தொடரை இழக்கும் நிலை ஏற்பட்டது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் 1 ரன்னிலும், கில் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன்பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் ஒட்டுமொத்த வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலர்களையும் வெளுத்து கட்டினார். ஒவ்வொரு ஓவருக்கும் ஸ்கூப் ஷாட், ராம்ப் ஷாட் என்று பந்துகள் பவுண்டரியை எல்லையில் பறந்துகொண்டே இருந்தது.
இதன்மூலம் 23 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்பின்னரும் அதிரடி குறையாமல் சூர்யகுமார் யாதவ் விளையாட, இந்திய அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியானது. இந்த நிலையில் சூர்யகுமார் யாதவ் 44 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும். இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த சூர்யகுமார் யாதவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இது இந்திய டி20 அணிக்காக சூர்யகுமார் யாதவ் பெறும் 12வது ஆட்டநாயகன் விருது இதுவாகும். மொத்தமாக 51 போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ் 12 முறை ஆட்டநாயகன் விருது வென்றுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் 148 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 11 ஆட்டநாயகன் விருதையும், 115 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 15 ஆட்டநாயகன் விருதையும் வென்றுள்ளனர்.
தற்போது 12வது ஆட்டநாயகன் விருதை சூர்யகுமார் யாதவ் வென்றதன் மூலம் ரோகித் சர்மாவின் சாதனையை முறியடித்துள்ளார். அதேபோல் விராட் கோலியின் சாதனையை முறியடிக்க இன்னும் 3 ஆட்டநாயகன் விருதை சூர்யகுமார் யாதவ் வெல்ல வேண்டும். இதன் மூலம் சூர்யகுமார் யாதவ் மீதான விமர்சனங்களுக்கும் பதில் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.