துபாய்: 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முடிவில் கோப்பை வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், தனது போட்டிச் சம்பளத்தை இந்திய ராணுவத்திற்கும் மற்றும் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வழங்கியதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகா, தனது போட்டிச் சம்பளத்தை 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
ஆனால், இந்த நடவடிக்கையில் கொல்லப்பட்ட பயங்கரவாதி மௌலானா மசூத் அசாரின் குடும்பத்தினரும் அடங்குவார்கள் என்பதால், சல்மான் அகாவின் இந்த அறிவிப்பு, மறைமுகமாகப் பயங்கரவாதியின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிப்பதாக அமைந்துள்ளது என்று கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய சல்மான் அலி அகா, "எங்கள் அணி சார்பாக, இந்தியாவின் தாக்குதலால் ('ஆபரேஷன் சிந்தூர்') பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கும், குழந்தைகளுக்கும் எங்கள் போட்டிச் சம்பளத்தை நன்கொடையாக வழங்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்" என்று அறிவித்தார்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக, இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது.
இந்திய இராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது, பாகிஸ்தானின் பஹவல்பூரில் உள்ள பயங்கரவாத முகாமில், ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவனான மௌலானா மசூத் அசாரின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் கொல்லப்பட்டனர். இவர் தான் பஹல்காம் தாக்குதல் பின்னணியில் இருப்பதாகவும் சில தகவல்கள் உள்ளன.
எனவே, 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி அளிப்பதாக சல்மான் அகா கூறியிருப்பது, கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிப்பதற்குச் சமம் என்று வன்மையாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
முன்னதாக, இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், தனது ஆசிய கோப்பை போட்டிச் சம்பளம் முழுவதையும் (₹28 லட்சம்), இந்திய ராணுவ வீரர்களுக்கும் மற்றும் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் குடும்பங்களுக்கும் வழங்குவதாக அறிவித்திருந்தார்.
ஒருபுறம், இந்தியா தனது ராணுவ வீரர்களுக்கும், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ஆதரவளிக்கும் நிலையில், மறுபுறம் பாகிஸ்தான் கேப்டன், பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அதாவது பயங்கரவாதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிப்பதாக அறிவித்திருப்பது, இரு நாடுகளின் மனப்பான்மைக்கு இடையே உள்ள மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசத்தை அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது.
இந்தச் செய்தியாளர் சந்திப்பில், சல்மான் அகா, இந்திய அணி கோப்பையை வாங்க மறுத்தது மற்றும் கைகுலுக்காதது போன்ற செயல்களை "கிரிக்கெட்டுக்கு அவமரியாதை" என்றும் விமர்சித்திருந்தார். களத்தில் நடந்த கிரிக்கெட் மோதல், தற்போது நன்கொடைகள் என்ற பெயரில் ஒரு புதிய, அபாயகரமான அரசியல் தளத்திற்கு நகர்ந்துள்ளது. இது இரு நாட்டு கிரிக்கெட் உறவில் மேலும் கசப்புணர்வையே ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.