
பாலிவுட்டில் காலடி வைத்தார்
சுஷாந்த் சிங் ராஜ்புத் வளர்ந்து வரும் பாலிவுட் நடிகர் ஆவார். தொலைக்காட்சிகளில் நடித்து, அங்கே இருந்து பாலிவுட்டுக்குள் காலடி எடுத்து வைத்தார். "கை போ சே" என்ற திரைப்படத்தில் அவர் சிறப்பான அறிமுகம் பெற்றார்.

ஏற்றத்தை கொடுத்த படம்
பின் அவருக்கு பெரிய ஏற்றத்தை கொடுத்த படம் என்றால் அது தோனியின் வாழ்க்கை வரலாறு படமான "எம்.எஸ் தோனி தி அன்டோல்டு ஸ்டோரி" தான். அதன் பின் தான் அவரது பாலிவுட் பயணம் மேலே சென்றது என்றே கூறலாம்.

பிரபலம்
மேலும், தோனியாக நடித்ததால் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பிரபலம் ஆனார் சுஷாந்த் சிங் ராஜ்புத். அவர் பெயர் கூட பலருக்கும் தெரியாது. ஆனால், அவரை பார்த்தால் "தோனி நடிகர்" தோனியாக நடித்தவர்" என மக்கள் எளிதாக அடையாளம் கண்டு கொண்டனர்.

தற்கொலை
எப்போதும் சிரித்த முகமாக இருக்கும் அவர் விரைவில் பாலிவுட்டின் முன்னணி நடிகராக வருவார் என கருதப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் ஞாயிறு அன்று தன் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.

நம்ப முடியவில்லை
கிரிக்கெட் வீரர்கள் பலரால் இந்த செய்தியை நம்ப முடியவில்லை. அனைவரும் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். தோனியாக சிறப்பாக நடித்து இருந்ததால் அப்போது கிரிக்கெட் உலகத்தால் வெகுவாக பாராட்டப்பட்ட அவரது மறைவு அவர்களால் நம்ப முடியாததாக இருக்கிறது.

தோனி ரசிகர்கள் அதிர்ச்சி
தோனி ரசிகர்கள் இணையம் முழுவதும் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். என்ன நடந்தது? ஏன் இளம் வயதில், அதுவும் பாலிவுட் துறையில் ஏற்றத்தை சந்தித்து வந்த ஒரு திறமையான நடிகர் இறக்க வேண்டும் என தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மரணத்தில் மர்மம்
சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் மர்மமும் உள்ளது. அவர் தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்து பலரும் பல்வேறு தகவல்களை கூறி வருகின்றனர். அவரது முன்னாள் மேனேஜர் திஷா சாலியான் ஜூன் 8 அன்று 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

தொடர்பு?
அவரது தற்கொலைக்கும், சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கும் தொடர்பு இருக்கலாம் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. விரைவில் இது குறித்த தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்கொலைகள் எந்த பிரச்சனைக்கும் தீர்வல்ல.


Click it and Unblock the Notifications











