மும்பை : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் நிர்வாகத்திற்கு தற்போது மிகப்பெரிய தலைவலி ஒன்று ஏற்பட்டுள்ளது.
அதாவது இந்திய அணியில் நட்சத்திர ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் விளையாடாமல் விலகினார்.
இதனால் அவருக்கு பதில் அணிக்கு கொண்டுவரப்பட்ட முகமது சமி மூன்று போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி விட்டார்.

இதனால் சமி பிளேயிங் லெவனிலிருந்து நீக்கப்பட மாட்டார் என்பது உறுதியாகிவிட்டது. இதனால் சூரியகுமார் யாதவ் அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரின் இடம் கேள்விக்குறியானது. சூரியகுமார் யாதவும் இங்கிலாந்துக்கு எதிராக நெருக்கடியான போட்டியில் அபாரமாக விளையாடிவிட்டு தன்னுடைய பெயரை காப்பாற்றி விட்டார்.
இதனால் ஸ்ரேயாஸ் ஐயரின் இடம் கேள்விக்குறியானது. ஆனால் இலங்கைக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 56 பந்துகளில் 82 ரன்கள் விளாசினார். இதில் 6 சிக்சர்களும் மூன்று பவுண்டர்களும் அடங்கும். இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய இடத்தை காப்பாற்றிக் கொண்டார். இதன் மூலம் வேறு யாரைத்தான் நீக்கலாம் என யோசித்தபோது முகமது சிராஜ் இந்த உலககோப்பை தொடரில் 6 போட்டிகளில் விளையாடி ஆறு விக்கெட்டுகளை மட்டும் தான் வீழ்த்தி இருந்தார்.
ஆனால் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் ஏழு ஓவர்கள் வீசி வெறும் 16 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி தன்னுடைய திறமையை நிரூபித்து விட்டார். இதனால் ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்பினால் யாரை அணியை விட்டு நீக்குவது என்பது தற்போது புரியாத புதிராக மாறிவிட்டது.
இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து திரும்பி அணிக்கு வந்தாலும் அவர் 100% உடல் தகுதியுடன் இருப்பாரா இல்லையா என்பது தெரியாது. இதனால் ஹர்திக் பாண்டியா முழு உடல் தகுதியை எட்டினாலும் அவரை பிளேயிங் லெவனில் சேர்ப்பது குறித்து யோசிக்க வேண்டும் என கிரிக்கெட் வல்லுனர்கள் வலியுறுத்தி உள்ளனர்.