சிட்னி: உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கடந்த 23 ஆண்டுகளாக ஏதாவது ஒரு ஆசிய அணிதான் இறுதிப்போட்டிக்கு முன்னேறி வருகிறது. அந்தப் பெருமையை இந்தியா கட்டிக் காக்குமா, நாளைய அரை இறுதியில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட்டில் கடந்த 23 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவுக்கு நிகராக ஆசிய அணிகளும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 1992 ஆம் ஆண்டு உலக கோப்பையில் இருந்து ஏதாவது ஒரு ஆசிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி வருகிறது.

1992 ஆம் ஆண்டு உலக கோப்பையை ஆசிய அணியான பாகிஸ்தானும், 1996-ம் ஆண்டு உலக கோப்பையை இன்னொரு ஆசிய அணியான இலங்கையும் வென்றன.
இதன் பிறகு 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தான், 2003 ஆம் ஆண்டு ஆசிய ஜாம்பவான் இந்தியா, 2007 ஆம் ஆண்டு இலங்கை ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. அங்கு ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தன.
2011 ஆம் ஆண்டு உலக கோப்பையில் இந்தியாவும், இலங்கையும் இறுதிப்போட்டியில் மோதின. உலக கோப்பையில் இரு ஆசிய அணிகள் இறுதிச்சுற்றில் சந்தித்தது அதுவே முதல் முறையாகும். அப்போட்டியில் இந்தியா மகுடம் சூடியது.
நடப்பு உலக கோப்பை திருவிழாவில் பிரதான ஆசிய அணிகளில் இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம் கால்இறுதியுடன் கிளம்பி விட்டன. இந்தியா மட்டுமே எஞ்சி இருக்கிறது.
சிட்னியில் நாளை நடக்கும் அரைஇறுதியில் இந்தியா, ஆஸ்திரேலியாவுடன் யுத்தம் நடத்துகிறது. இதில் இந்தியா வெற்றி பெற்றால், 23 ஆண்டுகளாக ஏதாவது ஒரு ஆசிய அணி இறுதி சுற்றுக்கு தகுதி பெறும் சிறப்பை தக்க வைத்துக் கொள்ளலாம். இதனால் இந்த ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் பல மடங்கு எகிறியுள்ளது.