தோனி ஓய்வு
தோனி ஓய்வு குறித்த பேச்சுக்கள் கடந்த ஓராண்டாகவே வலம் வந்து கொண்டு இருக்கிறது. 2019 உலகக்கோப்பை அரை இறுதியில் தான் கடைசியாக தோனி ஆடி இருந்தார். அதன் பின் இந்திய அணியில் அவர் எப்போதும் இடம் பெறவில்லை.
ஐபிஎல் ஆட ஆர்வம்
இந்த நிலையில், 2020 ஐபிஎல் தொடரில் ஆடி இந்திய அணியில் இடம்பெற தோனி ஆர்வமாக இருப்பதாக செய்திகள் வெளியானது. அதை நிரூபிப்பது போல, தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமில் கடுமையாக பயிற்சி செய்து வந்தார்.
தள்ளிப் போன ஐபிஎல்
இதற்கிடையே கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் தொடர் கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டது. அதனால், தோனி ஐபிஎல்-இல் ஆடி இந்தியா அணிக்கு எப்படி தேர்வாக முடியும் என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. பலரும் தோனி ஓய்வு பெற வேண்டும் என கூறி வருகின்றனர்.
வலம் வரும் வதந்திகள்
அதே சமயம், சமூக வலைதளங்களில் தோனி ஓய்வு பெற்றுவிட்டார் என சிலர் வதந்தியை கிளப்பி விட்டு வருகின்றனர். அதற்கு தோனி ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.
சையது கிர்மானி பேட்டி
இந்த நிலையில், அது பற்றி முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் சையது கிர்மானி பேட்டி அளித்துள்ளார். எப்போதும் தோனிக்கு ஆதரவாக பேசும் கிர்மானி என்ன கூறி இருக்கிறார்? அவர் தோனி இந்திய அணியில் ஆட மாட்டார் என கூறி உள்ளார்.
இந்திய அணியில் ஆட வாய்ப்பு இல்லை
தோனி அமைதியாக இருக்கிறார். அவரது எதிர்கால திட்டம் பற்றி பேசாமல் இருக்கிறார். அவர் இந்திய அணிக்கு திரும்ப மாட்டார் என்றே நினைக்கிறேன். அவரது கனவுகள், லட்சியங்களை அவர் ஏற்கனவே அடைந்து விட்டார். அவர் சாதிக்க இனி ஒன்றும் இல்லை.
கடைசி ஐபிஎல்
ஊடகங்களில் வரும் செய்திகளை வைத்து அவர் ஐபிஎல் தொடரில் ஆட ஆர்வமாக இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அனேகமாக, இந்த ஐபிஎல் தொடரே அவரின் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என குறிப்பிட்டார் சையது கிர்மானி.
2020 ஐபிஎல் நடக்குமா?
2020 ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், எப்போது நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. வரும் அக்டோபர் மாதம் டி20 உலகக்கோப்பை நடைபெறாத பட்சத்தில் 2020 ஐபிஎல் தொடர் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில், தோனி அதில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.